சனி, 27 டிசம்பர், 2014

உங்கள் ஆதரவிற்கு நன்றி...
என்னுடைய புதிய இணையதளத்தில் பதிவுகளை காணலாம்... நன்றி..

http://thamizhilakkiyam.com

https://www.facebook.com/thamizhilakkiyam/

ஞாயிறு, 9 டிசம்பர், 2012


புறநானூறு பாடல் 5 – நாட்டு மக்களை அன்புடன் காக்க !
பாடியவர் – நரிவெரூஉத் தலையார்
பாடப்பெற்றவர் – சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறை
திணை: பாடாண் திணை
துறை: செவியறிவுறூஉ; பொருண்மொழிக் காஞ்சியும் ஆம்.

பாடல்:
எருமை அன்ன கருங் கல் இடைதோறு,
ஆனின் பரக்கும் யானைய, முன்பின்,
கானக நாடனை ! நீயோ, பெரும !
நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்:
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா
நிரயம் கொள்பவரோடு ஒன்றாது, காவல்,
குழவி கொள்பவரின், ஓம்புமதி !
அளிதோ தானே; அது பெறல் அருங்குரைத்தே.

எளிய உரை:
எருமைகள் போல கருங்கற்கள்
இடையே பசுக்கூட்டமும், யானைகளும்
உலவும் காட்டிற்குச் சொந்தமானவனே !
நீ பெரியவன், உனக்கு ஒன்று சொல்வேன்
(தப்பாக எடுத்துக்கொள்ளாதே !)
அருளும் அன்பும் இல்லாதவர்,
நரகத்துக்குச் செல்வர்,
அவர்களோடு சேராது, குழந்தையைக்
காப்பாற்றும் தாயைப் போல நாட்டைக் காப்பாற்று !
அரச பதவி கிடைப்பது
அத்தனை எளிதல்ல.

ஞாயிறு, 25 நவம்பர், 2012


புறநானூறு பாடல் 4 – தாய் இல்லாக் குழந்தை போல
பாடியவர் – பரணர்
பாடப்பெற்றவர் – சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னி
திணை: வஞ்சித் திணை
துறை: கொற்றவள்ளை

பாடல்:
வாள், வலம் தர, மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன;
தாள், களம் கொள, கழல் பறைந்தன
கொல் ஏற்றின் மருப்புப் போன்றன;
தோல், துவைத்து அம்பின் துளை தோன்றுவ,

நிலைக்கு ஓராஅ இலக்கம் போன்றன;
மாவே, எறி பதத்தான் இடம் காட்ட,
கறுழ் பொருத செவ் வாயான்
எருத்து வவ்விய புலி போன்றன;
களிறு, கதவு எறியா, சிவந்து, உராஅய்,

நுதி மழுங்கிய வெண் கோட்டான்,
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி,
மாக் கடல் நிவந்து எழுதரும்

செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ –
அனையை ஆகன்மாறே,
தாய் இல் தூவாக் குழவி போல,
ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே.

எளிய உரை:
கத்தியில் படிந்த ரத்தக்கறை
செவ்வானம் போன்றது.
உன் காலணியின் சித்திர வேலைப்பாடுகள்
போரில் தேய்ந்து
எருதின் கொம்பு போல் ஆயின.
கேடையங்கள் அம்பினால் துளைக்கப்பட்ட
குறி தவறாத இலக்கை காட்டின.
இடம் வலம் திருப்பிக் காட்டிய
கடிவாளம் உராய்ந்து
குதிரையின் ரத்தம் சிவந்த வாய் எருதைக் கொன்ற
புலி வாய் போல ஆயிற்று.
கதவுகளின் மீது மோதி தந்தங்கள் உடைந்த
யானைகள் உயிர் உண்ணும் எமன் போல,
குதிரை பூட்டிய தேரில் நீ சிவப்புச் சட்டை
அணிந்து அழகாக வரும்போது
கடலிலிருந்து எழும் சூரியனைப் போலத் தோன்றும் !
உன்னைப் பகைத்தவர்கள் நாடு
தாயில்லாக் குழந்தை பசியால் அழுவதைப் போல்
ஓயாது கூவும்.

வியாழன், 8 நவம்பர், 2012


புறநானூறு பாடல் 3 – இல்லாமை தீர்ப்பவன்
பாடியவர் – இரும்பிடர்த் தலையார்
பாடப்பெற்றவர் – பாண்டியன் கருங் கை ஒள் வாட்பெரும்பெயர் வழுதி
திணை: பாடாண் திணை
துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்

பாடல்:
உவவு மதி உருவின் ஓங்கல் வெண் குடை
நிலவுக் கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற,
ஏம முரசம் இழுமென முழங்க,
நேமி உய்த்த நேஎ நெஞ்சின்,
தவிரா ஈகை, கவுரியர் மருக !

செயிர் தீர கற்பின் சேயிழை கணவ !
பொன் ஓடைப் புகர் அணி நுதல்,
துன் அருந் திறல் கமழ் கடாஅத்து.
எயிறு படையாக எயிற் கதவு இடாஅ,
கயிறு பிணிக்கொண்ட கவிழ் மணி மருங்கின்,

பெருங் கை, யானை இரும் பிடர்த் தலை இருந்து,
மருந்து இல் கூற்றத்து அருந் தொழில் சாயாக்
கருங் கை ஓள் வாட் பெரும்பெயர் வழுதி !
நிலம் பெயரினும், நின் சொல் பெயரால்;
பொலங் கழற் கால புலர் சாந்தின்

விலங்கு அகன்ற வியல மார்ப !
ஊர் இல்ல, உயவு அரிய,
நீர் இல்ல, நீள் இடைய,
பார்வல் இருக்கை, கவி கண் நோக்கின்,
செந் தொடை பிழையா வன்கண் ஆடவர்

அம்பு விட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை,
திருந்து சிறை வளை வாய்ப் பருந்து இருந்து உயவும்
உன்ன மரத்த துன் அருங் கவலை,
நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் – அது
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர்
இன்மை தீர்த்தல் வன்மையானே.

எளிய உரை:
உன் உயர்ந்த வெண்குடை போல நிலவு
கடல் வரம்பு பரந்த நாட்டில்
காவல் முரசு முழங்க
ஆட்சி செய்யும், கொடுப்பது தவறாத
பாண்டியன் மரபினில்
கற்புள்ள மனைவியின் கணவர்
பொன் முகப்படத்தை நெற்றியில் அணிந்த
யானையின் பிடரிமேல் உட்கார்ந்து
மின்னும் வாளுடன் போர் செய்யும் வழுதி !
இடையில் ஊர் ஏதும் இல்லாது
கானல் வீச, நீரில்லாமல்
நீண்ட இடைப்பாதை,
வழிப்பரிக்காரர்களை
கண்மேல் கை குவித்துப் பார்த்திருக்கும் மறவர்கள்,
அவர்களின் குறி தவறாத அம்புகள்,
அம்பு பட்டவர்களை மூடியிருக்கும்
கற்க்குவியல்கள்,
அவ்வுடல்களை உண்ண மரத்திலிருந்து
பார்த்திருக்கும் பருந்து,
உன்னைக் காணும் ஆர்வத்துடன்
இரவலர்கள் வருவார்கள். அவர்கள் இச்சையை
முகத்தைப் பார்த்தே உணர்ந்து
அவர்கள் வறுமையை தீர்க்கும்
வலிமை பெற்றவனே !

புதன், 24 அக்டோபர், 2012


புறநானூறு பாடல் 2 – பாரதத்தில் சோறளித்த சிறப்பு

பாடியவர் – முரஞ்சியூர் முடி நாகராயர்
பாடப்பெற்றவர் – சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன்
திணை: பாடாண் திணை
துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்

பாடல்:
மண் திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்,
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு

ஐம பெரும் பூதத்து இயற்கை போல –
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,
வலியும், தெறலும், அளியும், உடையோய் !
நின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண் தலைப் புணரிக் குட கடற் குளிக்கும்,

யாணர் வைப்பின், நல் நாட்டுப் பொருந !
வான வரம்பனை ! நீயோ, பெரும !
அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ,
நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை
ஈர் – ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய,

பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய் !
பா அல் புளிப்பினும், பகல் இருளினும்,
நா அல் வேத நெறி திரியினும்,
திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி,
நடுக்கின்றி நிலியரோ அத்தை – அடுக்கத்து,

சிறு தலை நவ்விப் பெருங் கண் மாப் பிணை,
அந்தி அந்தணர் அருங் கடன் இறுக்கும்
முத் தீ விளக்கின், துஞ்சும்
பொற் கோட்டு இமயமும், பொதியமும், போன்றே !

எளிய உரை:
மண் நிறைந்த நிலமும்
நிலம் ஏந்திய வானமும்
வானைத் தழுவும் காற்றும்
காற்று வளர்க்கும் நெருப்பும்
நெருப்பைப் பகைக்கும் நீரும் என்றபடி
ஐம்புலன்களின் இயற்கை போல
பகைவரிடம் பொறுமை, விரிவான ஆலோசனை,
வலிமை, திறமை, தருமமும் உள்ளவனே,
உன் கடலில் பிறந்த சூரியன்
வெண்தலை அலைகள் கொண்ட
மேற்குக் கடலில் குளிக்கும்
நல்ல நாட்டின் அரசனே,
வானம் உன் வரம்பு.
பாண்டவர்கள்
நிலத்தை பற்றிக்கொண்ட
நூறு பேருடன் போராடிய
பாரதப் போரில் சோறுபோட்டாய்.
பால் புளிக்கலாம்,
பகல் இருளாகலாம்,
நாலு வேதங்கள் திசை மாறலாம்,
உன்னைச் சேர்ந்தவர் மாற மாட்டார்கள்.
அந்தணர் அந்திவேளைக் கடமைகளில் எழுப்பும்
தீயின் வெளிச்சத்தில்,
சிறிய தலை, பெரிய கண் பெண்மான் உறங்கும்,
மலைச் சரிவுள்ள
பொன் உச்சி இமயமும் பொதிகை மலையும் போல
நீண்டநாள் வாழ்வாய்.

செவ்வாய், 23 அக்டோபர், 2012


புறநானூறு பாடல் 1 – உமையை இடப்பக்கம் கொண்ட ஒருவன்

பாடியவர் – பெருந்தேவனார்
பாடப்பெற்றவர் – சிவபெருமான்

பாடல்:
கண்ணி கார் நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாரும் கொன்றை :
ஊர்தி வால் வெள் ஏறே; சிறந்த
சீர் கெழு கொடியும் அவ் ஏறு என்ப :
கரை மிடறு அணியலும் அணிந்தன்று; அக் கறை
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ் உருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்:
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப் பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே –
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீர் அறவு அறியாக் கரகத்து,
தாழ்சடைப் பொலிந்த, அருந் தவத்தோற்கே.

எளிய உரை:
தலையிலும் அழகிய மார்பிலும் கொன்றைப் பூ மாலை,
வாகனம் எருது, கொடியும் எருது,
கழுத்தை அழகு செய்யும் நச்சுக் கறை,
அதை அந்தணர்கள் புகழ்வார்,
சில சமயம் பாதிப் பெண்ணாகவும் தோன்றி மறையும் உருவம்,
நெற்றியில் நிலாத் துண்டம்,
அதைப் போற்ற பதினெட்டு கந்தர்வர்கள்,
எல்லா உயிர்களுக்கும் காவல்,
நீர் வற்றாத கமண்டலம்,
கடுந்தவத்தின் அடையாளமாக தாழ்ந்த சடை.

ஞாயிறு, 21 அக்டோபர், 2012


புறநானூறு... தொடர்ச்சி...

புறநானூறின் காலத்தைப் பற்றி நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் உள்ளன. புறநானூறு உள்ளிட்ட பல சங்கப்பாடல்களில் யவனர்களைப் பற்றியும் அவர்களுடன் வாணிபம் பற்றியும் வரிகள் உள்ளன. பெரிப்லூசு, டாலமி, ப்ளினி போன்றவர்களின் பூகோளப் பிரயாண நூல்களில் தென்னிந்தியத் துறைமுகங்களில் குறிப்பாக மிளகு பண்டமாற்று நடந்ததைப்பற்றியும் செய்திகள் உள்ளன. புறநானூறு பாடல் 343இல் முசிறி துறைமுகத்தில் வீடுதோறும் மிளகு குவித்து வைத்திருப்பதையும் அவைகளை பண்டமாற்ற தங்கத்தைக் கொண்டுவரும் சிறு படகுகளையும் பற்றி சொல்கிறது.

பாடல் 174 சோழ அரசனை மீட்ட ஒரு சரித்திர சம்பவத்தை கூறுகிறது. சிலப்பதிகாரம், சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவில் கட்டியதையும் இலங்கை மன்னன் கயவாகு வந்து வழிபட்டதையும் சொல்கிறது.கயவாகு கி.பி. 171இலிருந்து 192வரை ஆண்டதை கெய்கர் குறிப்பிட்டுள்ளார். செங்குட்டுவன் காலத்தை பதிற்றுப்பத்திலிருந்து கி.பி. 170இலிருந்து 226வரை என அறியமுடிகிறது. செங்குட்டுவன், உதியன் செரலாதனின் பேரன். எந்த நூற்றாண்டாக இருந்தாலும் புறநானூற்றின் பாடல்கள் உலக இலக்கியத் தரத்துக்கு உயர்ந்தவை என்பதில் சந்தேகமில்லை.

புறநானூற்றின் பாடல்களில் உவமைகள் அதிகம். “என்ன கேட்கிறாய்” என்று நேரடியாக சொல்லாமல் “என் சிறிய வீட்டின் நல்ல தூணைப் பிடித்துக்கொண்டு என்ன கேட்கிறாய்” என்று சொல்வார்கள். வேல் என்று நேரடியாக சொல்லமாட்டார்கள், “பூவார் காவின் புனிற்றுப் புலால் நெடுவேல்” என்பார்கள். பூமியில் சிறிந்த பாதுகாப்பும் புதிதான புலால் நாற்றமும் உடைய நீண்ட வேல் என்பார்கள். மனைவி என்று நேரடியாக இருக்காது. “நாண் அலது இல்லாக் கற்பின் வாள்நூதல் மெல்லியல் குறுமகள்” என்று சொல்லுவார்கள். நாணம் மட்டுமே நகையாக அணிந்த மனைவியை நோக்கித் திரும்புகிறேன் என்பதை அவள் நெற்றி கண் போன்றவைகளை ஆகுபெயர்களாகச் சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமில்லாமல் வருநித்துவிட்டுத்தான் விடயத்துக்கே வருவார்கள். அதில் அவளது ஏழ்மையும் அழகும் ஒரே சமயத்தில் வெளிப்படுகின்றன.

அடுத்த பதிவிலிருந்து புறநானூறு பாடல்கள் தொடங்கும்...

புறநானூறு:

புறநானூறு சங்க காலத்தை சேர்ந்த ஒரு தொகை நூல். தொகை என்றால் தொகுப்பு. இப்போது கவிதை தொகுப்புகள் வருவதில்லையா, அது போல் பழன்காலத்துத் தொகுப்புகள் பல உள்ளன. அவைகளில் எட்டு சங்க காலத்தை சார்ந்தவை. எட்டுத்தொகை என்பார்கள். அவற்றின் பெயர்கள் ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல். இவைகளுடன் பத்து நீண்ட பாடல்களும் சங்க காலத்தைச் சேரும். அவை பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பட்டினப் பாலை, குறிஞ்சிப் பாட்டு, மலைபடுகடாம், மதுரைக்காஞ்சி, நெடுநெல்வாடை, முல்லைப் பாட்டு, சிறுபாணாற்றுப்படை, திருமுருகாற்றுப்படை. இவை இரண்டிலும் சேர்ந்து மொத்தம் 2381 தனிப்பாடல்கள் உள்ளன. மூன்று வரியிலிருந்து 782 வரை நீளமுள்ள பாடல்கள். உலக இலக்கியத்தில் எதிலும் இம்மாதிரியான தொகுப்புகள் இல்லை.

இன்றைய தொகுப்புகள் பெரும்பாலும் ஒரே கவிஞருடையதாக இருக்கும். புறநானூறு அப்படியில்லை. பல புலவர்களின் நானூறு பாடல்களின் தொகுப்பு. புறம் என்னும் காதல் அல்லாத, வெளி உலகம் சார்ந்த வீரம், போர், கொடை, நற்குணங்கள், பரிசு கேட்டல், பெறுதல் போன்ற பொருள்களில் தொகுக்கப்பட்ட நானூறு பாடல்கள். சங்க இலக்கியங்களை அகம, புறம் என்று இரு பெரிய பிரிவின்கீழ் வகைப்படுத்துகிறார்கள்.

இந்த நானூறு பாடல்களைப் பற்றிய புள்ளி விவரங்கள். இந்த நானூறு பாடல்களில் இரண்டு பாடல்கள் கிடைக்கவில்லை. நாற்பத்து நாலு பாடல்களில் ஒரு சில சீர்கள் அல்லது வரிகள் இல்லாமல் குறைபட்டுக் கிடைத்துள்ளன. இந்த நானூறு பாடல்களை நூற்று நாற்பத்தேழு புலவர்க்குக் குறையாதவர்கள் பாடியுள்ளனர். சரியாக இத்தனை பேர் என்று சொல்ல முடியவில்லை. 159 வரை கணக்கு சொல்கிறார்கள். மூலத்தில் உள்ள பாட பேதங்களால் சில புலவர்களின் பெயர்கள் வேறுபடுகின்றன. உதாரணம் மாங்குடி கிழாரும் மாங்குடி மருதனாரும் ஒன்றா வேறா போன்ற சந்தேகங்கள் உள்ளன. சிருவெனண்தேரையர் என்பவரும் ஐயாதிச் சிறுவெண் தேரையார் என்பவரும் ஒருவரா என்பது தெரியவில்லை. பதினான்கு பாடல்களை எழுதியவர் பெயர் தெரியவில்லை.

இப்புலவர்களில் பதினான்கு பேர் அரசர்கள், அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் ஆதரவில் இப்பாடல்கள் தொகுக்கப்பட்டிருக்கலாம் (நற்றிணை நூல் அப்படித்தான் மாறன்வழுதி மன்னனால் தொகுக்கப்பட்டது). புறநானூற்றுப் புலவர்களில், பதினைந்து பேர் பெண்கள். புறநானூற்றுப் புலவர்களில் பலர் மற்ற சங்க நூல்களிலும் பாடியுள்ளனர். புறநானூறில் மட்டும் பாடிய புலவர்கள் அறுபத்தாறு பேர்.

தொடரும்...

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

கணக்கதிகாரம் -  கலப்பின உலோகம் செய்யும் முறை

பண்டைகாலங்களில் அரசர்களின் பல்லக்கில் இருந்து போர்வாள் வரை அனைத்தும் உருவாக்க அல்லது வடிவமைக்க பட்டறைகள் தேவைப்பட்டிருக்கிறது. அதன் காரணமாகவே பட்டறைகள் உருவாயின. பின்னர், கொல்லன் பட்டறை , தச்சன் பட்டறை என்று பல துறைகள் உருவாயின.

உலோகங்களை கொண்டு பித்தளை, வெண்கலம் போன்ற கலப்புரு பொருட்களை தமிழர்களும் உருவாக்கிருக்கிறார்கள். தமிழ் கணித நூலான கணக்கதிகாரத்தில், வெண்கலம் மற்றும் பித்தளை பிறப்பிக்கும் விவரம் பற்றிய ஒரு செய்யுள் காணப்படுகிறது.

"எட்டெடை செம்பி லிரெண்டை யீயமிடில்
திட்டமாய் வெண்கலமாஞ் சேர்ந்துருக்கி - லிட்டமுடன்
ஓரேழு செம்பி லொருமூன் றுதுத்தமிடில்
பாரறியப் பித்தளையாம் யார்"

ஒரு எடை என்பது ஒரு பலம், அதாவது 40.8 கிராம்

ஈயம் , துத்தம் - உலோகங்கள் ; பலம் - பழந்தமிழர் எடை அளவு (40.8 கிராம்).

விளக்கம்:

வெண்கலம் பித்தளை பிறப்பிக்கும் விவரம் எட்டுப்பலஞ் செம்பிலே இரண்டு பலம் ஈயமிட்டுருக்க வெண்கலமாம். ஏழலரைப் பலஞ் செம்பிலே மூன்று பலந் துத்தமிட்டுருக்க பித்தளையாம் என்று .

இக்குறிப்பில் இருந்து, 326.4 கிராம் செம்பும், 81.6 கிராம் ஈயமும் ஒரு உலையில் போட்டு நன்கு கலவை செய்து உருக்கி வருவது வெண்கலம் என்றும், 306 கிராம் செம்பும், 122.4 கிராம் துத்தமும் உலையில் போட்டு உருக்கி வருவது பித்தளை என்றும் தெரிகிறது . ஆனால் கிடைக்கும் வெண்கலமும், பித்தளையும் எவ்வளவு எடை இருக்கும் என்ற குறிப்பு காணப்பட வில்லை. ஆகையால் இதன் எடைகளை கூட்டி , ஏறக்குறைய 400 கிராம் வெண்கலமும், 425 கிராம் பித்தளையும் கிடைக்கும் என்று கூறலாம்.

சனி, 25 ஆகஸ்ட், 2012


வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போல் மறைமுகமாக இகழ்வதும், இகழ்வது போல் மறைமுகமாகப் புகழ்வதுமாகும்.

எடுத்துக்காட்டுகள்:

புகழ்வது போல் இகழ்தல்:

தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்
திருக்குறள் - திருவள்ளுவர்

"கயவர்கள் தம்மனம் விரும்பும் செயல்களைத் தடுப்பாரின்றிச் செய்து முடிப்பதால் தாம் விரும்பும் செயல்களைச் செய்யும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்" என்பது இக்குறட்பாவின் பொருள்.

கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போல தோன்றினாலும், தேவர்கள் உயர்ந்த செயல்களையே செய்வர், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருள் குறிப்பால் உணர்த்துவதைக் கானலாம். எனவே இது உண்மையில் கயவர்களை பழித்தலே ஆகும். (புகழ்வது போல் இகழ்தல்)

இகழ்வது போல் புகழ்தல்:

பாரி பாரி என்றுபல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே
புறநானூறு பாடியவர்: கபிலர்

"புலவர் பலரும் பாரி ஒருவனையே புகழ்கின்றனர். பாரி ஒருவன் மட்டுமா கைம்மாறு கருதாமல் கொடுக்கின்றான்? மாரியும்தான் கைம்மாறு கருதாமல் கொடுத்து இவ்வுலகம் புரக்கின்றது" என்பது இப்பாடலின் பொருள். இது பாரியை இகழ்வது போலத் தோன்றினும், பாரிக்கு நிகராகக் கொடுப்பாரில்லை என்று புகழ்ந்ததே ஆகும்.(இகழ்வது போல் புகழ்தல்)

விகடராமன் குதிரை

முன்னே கடிவாளம், மூன்று பேர் தொட்டு இழுக்கப்
பின்னே இருந்து இரண்டு பேர் தள்ள – எந்நேரம்
வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை
மாதம் போம் காத வழி!
நூல்: தனிப்பாடல், பாடியவர்: காளமேகம்

விகடராமன் என்பவர் ஒரு மெலிந்த குதிரையையும் சில வேலைக்காரர்களையும் வைத்துக்கொண்டு ஊர் முழுக்க அலட்டல் உலா வந்துகொண்டிருந்தார். அதைப் பார்த்த காளமேகம் கிண்டலாகப் பாடிய பாடல் இது. எந்நேரமும் வேதம் படிக்கிறவன் விகடராமன். அவனுடைய குதிரைக்கு முன்னே கடிவாளம் உண்டு, ஆனால் அதைத் தொட்டு இழுத்து ஓட்டுவதற்கு ஒருவர் போதாது, மூன்று பேர் வேண்டும்.அப்போதும் அந்தக் குதிரை ஓடிவிடாது. பின்னால் நின்றபடி இரண்டு பேர் தள்ளவேண்டும். இப்படி ஐந்து பேரால் ‘ஓட்டப்படும்’ அந்தக் குதிரை, அதிவேகமாக ஓடும், மாதம் ஒன்றுக்குக் காத தூரம் சென்றுவிடும்.

’காதம்’ என்பது பழங்காலத் தமிழ் அளவுமுறை. ஒரு காதம் = சுமார் ஆறே முக்கால் கிலோமீட்டர்.

செவ்வாய், 24 ஜூலை, 2012


அறிந்துகொள்வோம்:

பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.

* வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் "சி" என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.

* கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.

* மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

* வைட்டமின் "பி" மற்றும் வைட்டமின் "சி" ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.

* கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும் மற்றும் குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும். கசாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.

* கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

* கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.

* கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.

* சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.

* நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.

* கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.

* கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.

ஞாயிறு, 15 ஜூலை, 2012


அகநானூறில் இருந்து ஒரு பாடல்...

பாடல்:
விசும்பு இழி தோகைச் சீர் போன்றிசினே
பசும் பொன் அவிர் இழை பைய நிழற்ற,
கரை சேர் மருதம் ஏறிப்
பண்ணை பாய்வோள் தண் நறுங் கதுப்பே.

விளக்கம்:
அவளுடைய புதிய தங்க ஆபரணங்கள் பிரகாசமாக ஒளிர்கின்றன.
கரையோரம் இருக்கும் மருத மரத்தினில் ஏறி அவள் ஆற்றில் குளிப்பதற்காக அவள் குதித்தபோது, நறுமணம் வீசுகின்ற அவளுடைய கூந்தல், வானத்தில் இருந்து இறங்குகின்ற மயில் போல தெரிந்தது...


பழமொழி:
உழுகிற நாளில் ஊருக்கு போய், அறுக்கிற நாளில் அரிவாள் கொண்டு வந்தது போல..

விளக்கம்:
வயலில் உழவு செய்ய வேண்டிய நேரத்தில் எல்லோருடன் சேர்ந்து உழவு வேலை செய்யாமல், ஒரு சிலர், அறுவடை காலத்தில் அறுவடை செய்ய அரிவாள் கொண்டு வந்து நிற்பார்கள்...

அதாவது, வேலை செய்ய வேண்டிய நேரத்தில் மற்றவருடன் சேர்ந்து வேலை செய்யாமல், அதற்கான பலன் கிடைக்கும்போது அதை அனுபவிக்க சிலர் முயலுவார்கள்...

சனி, 26 மே, 2012


கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.

இப்பாடலை எங்கேயோ கேட்ட ஞாபகம் வருகின்றதா?
ஆம்... திருவிளையாடல் திரைப்படத்தில் தருமி பரிசில் பெற சிவபெருமான் தருமிக்கு கொடுத்தனுப்பிய பாடல் இதுதான்...

இறையனார் அவர்கள் எழுதிய இப்பாடல் குறுந்தொகை என்னும் நூளில் இடம்பெற்றுள்ளது...

விளக்கம்:

பூக்களைத் தேர்ந்து(ஆராய்ந்து) தேன் உண்ணும் அழகிய சிறகுகளை கொண்ட வண்டே, நீ சொல்வாயாக... நீ என்னுடைய நிலத்திலுள்ள வண்டு என்பதால் என்னுடைய விருப்பத்தை உரைக்காமல் நீ கண்கூடாக அறிந்த உண்மையைக் கூறுவாயாக... மயிலின் மெல்லிய இயல்பும், செறிவான பற்களும், எழுபிறப்பிலும் என்னுடன் நட்பும் பொருந்திய தலைவியின் கூந்தலை விடவும் மணம் பொருந்திய பூவும் இருக்கின்றதோ?

செவ்வாய், 22 மே, 2012



ஓடும் நீளம் தனை ஒரே எட்டு
கூறு தாக்கி கூரிலே ஒன்றை
தள்ளி குன்றத்தில் பாதியை சேர்த்தால்
வருவது கர்ணம் தானே

போதாயனர் என்னும் புலவர் எழுதிய பாடல் இது...

விளக்கம்:

அடிப்பகுதியினை (நீளம்) எட்டு சமமான பகுதிகளாக (கூறு) பிரித்து, அதில் ஒரு பகுதியினை கழித்து அதனுடன் குன்றின் அரை பகுதியினை கூட்டினால் கர்ணத்தின் அளவு கிடைக்கும்.

மேற்கூறியது வேறு ஒன்றமல்ல... நாம் கணிதத்தில் படித்த பிதகோரசு தேற்றம்தான் (Pythagoras theorem).

அடிப்பகுதி (Base) - 8
குன்று (Height) - 6

அடிப்பகுதியினை எட்டு சமமான பகுதிகளாக பிரித்து, அதில் ஒரு பகுதியினை கழித்து --> 8-(8/8) = 8 - 1 = 7

குன்றின் அரை பகுதி --> 6/2 = 3

அவை இரண்டையும் கூட்டினால் --> 7 + 3 = 10

பிதகோரசு தேற்றத்தின் படி (Pythagoras theorem):
கர்ணம் = அடிப்பகுதியின் வர்க்கம் + குன்றின் வர்க்கம் ஆகியவற்றின் வர்க்கமூலம்...

கர்ணத்தின் வர்க்கம் = (8 * 8) + (6 * 6) = 64 + 36 = 100
கர்ணத்தின் வர்க்கமூலம் = 10

பிதகோரசு தேற்றம் இயற்றப்படுவதர்க்கு முன்பாகவே அந்த கணித கூற்றினை நமது முன்னோர்கள் கூறிவிட்டனர்... நாம் அவற்றை உலகறிய எடுத்து செல்லாததால் நமது கண்டுபிடிப்பு உலகிற்கு தெரியவில்லை...

ஞாயிறு, 20 மே, 2012


ஒரு சமயம் கம்பர் ஔவையார் அவர்களை சந்திக்க நேர்ந்தது. முன்னர் ஔவையார் தன்னை பற்றி அரசனிடம் கூறியதை அறிந்திருந்த கம்பர் ஔவையார் அவர்களை அவமானப்படுத்த எண்ணி பின்வரும் புதிரினை கேட்டார்.

ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ

எதற்கு ஒரு கால் இருக்கும் ஆனால் நான்கு கூரை (பந்தல்) இருக்கும் என்பதே கேள்வி. நான்கு இலைகள் சேர்ந்து செய்யப்பட்ட கூரைபோல காட்சி தரும் "ஆரை" என்னும் கீரைக்கு ஒரே ஒரு அடிப்பகுதிதான் இருக்கும். "ஆரை" கீரையைத்தான் கம்பர் இப்படி விடுகதையாக கேட்டார்.

"டீ" என்கின்ற எழுத்து பெண்களை மரியாதையின்றி மற்றும் தரக்குறைவாக குறிக்க பயன்படுத்தப்படும் எழுத்தாகும். கம்பர் அந்த எழுத்தினை சொல்லில் பயன்படுத்தி விடுகதையினை கேட்டார்.

இதை கேட்டு மிகுந்த சினமுற்ற ஔவையார்,

எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே, - முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா

என்று பதிலளித்தார்.

இதில் முதல் வரியில் வரும் " எட்டேகால்" என்பதை எட்டு + கால் அதாவது "8 + 1/4" என்று பிரித்து படிக்க வேண்டும். அப்படி படித்தால் "8" என்பதற்கு உரிய தமிழ் எண் " அ" அதே போல் கால் (Quarter) 1/4 - என்னும் பின்னத்துக்கு உரிய தமிழ் எண் " வ ".

(1/4 cutting என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்துவிட்டு பின்னர் வரிவிலகிற்காக தமிழில் "வ" கட்டிங் என்று பெயர் வைத்ததை வேண்டுமானால் இங்கே புரிவதற்காக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்)

ஆக, எட்டேகால் = எட்டு + கால்
(எட்டு) 8 = அ
(கால் )1/4 = வ

எனவே இப்போது எட்டேகால் = அவ

இப்போது மேற்கண்ட பாடலின் முதல் வரியை படியுங்கள் .
'அவ' லட்சணமே என்று பொருள் வருகிறதல்லவா ?

எமனேறும் பரியே - எருமைக்கடா

மட்டில் பெரியம்மை வாகனமே - மூத்த தேவி என்னும் மூதேவியின் வாகனமான கழுதையே

முட்டமேல் கூரையில்லா வீடே - மேல் கூரையில்லா வீடு அதாவது குட்டிச்சுவரே

குலராமன் தூதுவனே - ராமன் தூதுவனே அதாவது குரங்கே

கடைசி சொல்லான 'ஆரையடா சொன்னாயடா ' என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் வரும்.

" நீ ஆரைக் கீரையைத்தான் சொன்னாய் அடா! " என்பது ஒரு பொருள்.

இதில் இப்போது 'சொன்னாய்' என்பதை மட்டும் பிரித்தால்
'சொன்னாய்' = சொன்ன + நாய் என்று நாயயையும் குறிக்கும் அல்லது
யாரை பார்த்து சொன்னாய் என்று கேட்பது போலவும் குறிக்கும்.

புதன், 16 மே, 2012


"கம்பர்" மற்றும் "ஔவையார்" பற்றிய முந்தைய பதிவின் தொடர்ச்சி...

தம்மால் எளிதாக செய்யக்கூடிய செயலினை செய்துவிட்டு தாம் பெரியவர் என்று கூற இயலாது என்று ஔவையார் தனது பாடல் மூலம் எடுத்துரைத்தார்...

கம்பரின் பெருமையை காப்பாற்ற, அரசன், பிறப்பிலேயே கம்பர் ஒரு கவிஞர் என்று கூற, அதற்கு ஔவையார்,

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.

வரைந்து பழகினால்தான் சிறந்த ஓவியம் வரையமுடியும், பேசி பழகினால்தான் தமிழில் சிறந்த பேச்சாளராக திகழ முடியும், படித்து பழகினால்தான் சிறந்த அறிவு உள்ளவராக விளங்க முடியும், ஒழுக்கத்துடன் நடந்தால்தான் பெருந்தன்மை உள்ளவராக வாழ முடியும். நட்பு மனப்பான்மை, கருணை உள்ளம், நன்மை செய்யும் மனப்பாங்கு ஆகியவை தவிர மற்ற அனைத்தும் பயிற்சி செய்தாலன்றி செவ்வன செய்யயியலாது. கம்பரின் கவித்திறமையும் கவி எழுதி பழகியாதால் வந்ததேயன்றி பிறப்பிலேயே வந்ததன்று என்று கூறினார் ஔவையார்...

ஔவையார் கூறியது உண்மை எனத்தெரிந்தும் கம்பரின் பெருமையை நிலைநாட்ட கவித்திரனிலும் சொல்வன்மையிலும் கம்பருக்கு நிகராக யாரும் இல்லை எனக்கூறினார்.

காணாமல் வேணதெல்லாம் கத்தலாம் கற்றோர்முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே நாணாமல்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்கால்
கீச்சுக்கீச் சென்னும் கிளி .

பேசக்கற்றுக்கொண்ட கிளி தொடர்ந்து பேசிக்கொண்டும், பிதற்றிக்கொண்டும் இருக்கும். ஆனால் பூனையை கண்டவுடன் பேசுவதை மறந்து அலற ஆரம்பித்துவிடும். அதுபோல், சிறந்த கல்வி கற்றோ அல்லது சிறந்த செயல் செய்தபின்போ நம்மை சுற்றியுள்ளவர் மத்தியில் அதை பற்றி பேசலாம், ஆனால், சான்றோர் முன் தன்னடக்கத்துடன் நடந்து கொள்ளவேண்டும், இல்லையேல், பூனையை கண்ட கிளியின் நிலைமைக்கு அவர்கள் தள்ளப்படுவர் என்று பாடினார்.

செவ்வாய், 15 மே, 2012


கம்ப இராமாயணம் எழுதிய பிறகு கம்பர் மிகச்சிறந்த புலவராக கருதப்பட்டு போற்றப்பட்டார். அரசரும் கம்பரின் கவி திறமையை மட்டுமே பாராட்டிக்கொண்டிருந்ததால் மற்ற புலவர்களை அரசன் கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதன் காரணமாக கம்பர் மற்ற புலவர்களை மரியாதை குறைவாக நடத்த ஆரம்பித்தார். அவருடைய உடையிலும் ஆடம்பரம் கூடியிருந்தது.

இதை கண்ட ஔவையார், பின்வருமாறு கவி புனைந்தார்.

விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்
விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும் அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று.

வஞ்சக எண்ணம் கொண்ட இரண்டு பேர் புகழ்ந்து பேசிடவும், விரல்கள் முழுவதும் மோதிரங்கள் மற்றும் பட்டாடை உடுத்தி இருக்கும் கவிஞர் எழுதிய பாடல் நஞ்சினை போல தீயதாக அல்லது வேம்பினை போல கசந்தாலும் நன்றாக இருப்பாதாகவே கூறுவர்.

ஒருவர் தான் எழுதிய கவி மூலமாக பெயரும் புகழும் அடைந்திருந்தாலும் அவர் தன்னடக்கத்துடன் இருந்திடவேண்டும் என்று ஔவையார் கூறுகிறார்...

மேற்கூறிய ஒளவையாரின் பாடலினை கேள்விப்பட்ட அரசன், கம்பரின் நடவடிக்கையின் மேல் ஔவையார் அவர்கள் கொண்டிருந்த கோபத்தினை கண்டு, கம்பருக்கு ஆதரவாக, வேறு எந்த புலவரும் செய்திடாத ஒரு செயலினை (கம்ப இராமாயணம் எழுதியது) கம்பர் செய்திருப்பதாக புகழ்ந்தார்.

இதை கேட்ட ஔவையார், பின்வருமாறு பாடினார்.

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.

தூக்கணாங்குருவி கட்டுகின்ற எளிதற்ற மற்றும் நுண்மையான கூடு, கரையான் கட்டுகின்ற உறுதியான மண்மேடு, தேனீக்கள் கட்டுகின்ற தேன் கூடு, சிலந்தி கட்டுகின்ற வலை வேறு எவராலும் அவ்வளவு எளிதாக செயலன்று. அதைப்போல் தாம் செய்த செயல்களை வைத்து தற்புகழ்ச்சி பேசுவதில் பயனில்லை.

அதுமட்டுமல்லாமல், தம்மால் சுலபமாக செய்யக்கூடிய மற்றவருக்கு கடினமான ஒரு செயலினை செய்துவிட்டு மற்றவரைவிட உயர்வானவர் என்று கூறமுடியாது. தூக்கணாங்குருவி அதன் கூடிநி சுலபமாக கட்டிவிடும், ஆனால், கரையான் கட்டுகின்ற உறுதிமிக்க மண்மேடினை கட்ட இயலாது. ஆகையினால் ஒருவர் தம்மால் எளிதாக செய்யக்கூடிய செயலினை செய்துவிட்டு தாம் பெரியவர் என்று கூற இயலாது என்று கூறினார்...

இதை கேட்டு, கம்பரின் மானத்தை காப்பாற்ற அரசன் கூறியது என்ன? அதற்கு ஔவையார் கூறியது என்ன? இவற்றை அடுத்த பதிவினில் காண்போம்...

சனி, 12 மே, 2012


மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று
மிதியாமை கோடி பெறும்
உண்ணீர்உண் ணீரென் றுபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்
கோடி கொடுத்ததும் குடிப்பிறந்தார் தம்மொடு
கூடுவதே கோடி பெறும்
கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்

"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் எழுதிய பாடல் இது...

விளக்கம்:
தன்னை மதியாதார் வீட்டிற்கு செல்லாமல் இருப்பது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்... விருந்தினரை சரியாக உபசரிக்காதவர் வீட்டில் உணவு அருந்தாமல் இருப்பது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்... கோடி செல்வம் செலவு செய்து உயர்ந்தோர் நட்பு பெற்றாலும் அது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்... எவ்வளவு கோடி செல்வம் பெற்றாலும் கொடுத்த வாக்கினை காப்பாற்றுவது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்...

செவ்வாய், 8 மே, 2012


ஆன முதலில் அதிகம் செலவானால்
மானமழிந்து மதிகெட்டு போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் எழுபிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு

"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் எழுதிய பாடல் இது...

விளக்கம்:
ஈட்டும் பொருளினைவிட அதிகமாக செலவு செய்பவர்கள் பிற்காலத்தில் தங்கள் மானத்தையும், அறிவினையும், உணர்வையும் இழப்பார்கள்... அவர்கள் எவ்வழி நடந்தாலும் திருடர்கள் போல நடத்தப்படுவர்... எத்துனை பிறப்பு பிறந்தாலும் எவ்வித மரியாதையும் கொடுக்கப்படாமல் தீயவர் போல நடத்தப்படுவர்...

திங்கள், 7 மே, 2012


குறள் 615:
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.

உரை:
தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்.

ஞாயிறு, 6 மே, 2012


சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி

"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் அவர்கள் எழுதியது...

விளக்கம்:
மக்களை "சாதி" என்ற முறையில் வைத்து பிரிக்கவேண்டுமெனில், இரண்டாக பிரிக்கலாம்... நீதி, நெறிமுறை தவறாமல் பெருந்தன்மையுடன் வாழும் பெரியோர் என்ற ஒரு பிரிவும், நீதி, நெறிமுறை தவறி நடக்கும் இழிகுலத்தோர் மற்றொரு பிரிவும் ஆவர்...

வெள்ளி, 4 மே, 2012


"மூதுரை" என்னும் நூளில் "ஔவையார்" எழுதிய பாடல் இது...

அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளய்
நட்டாலும் நண்பல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

சூழ்நிலையின் தாக்கம் இருந்தாலும் சில பொருட்களின் தன்மை மாறுவதில்லை... நன்கு கொதிக்க வைத்த பாலின் சுவை  மாறாமல் இருப்பது போல... நண்பர்கள் அல்லாத இருவர் அருகருகே இருந்தாலும் அவர்கள் நண்பர்களாக மாறுவதில்லை...

தீயினால் சுடப்பட்டாலும் உட்புறம் வெண்மை நிறம் மாறாமல் இருக்கும் சங்கினை போல, எத்துனை துன்பம் வந்தாலும் மேன்மக்கள் பெருந்தன்மை உடையவர்களாகவே திகழுவர்...

புதன், 2 மே, 2012


குறள் 605:
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

உரை:
காலம் தாழ்த்தி செய்வது, மறதி, சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவார் விரும்பி ஏறும் சிறு படகாகும்.

திங்கள், 30 ஏப்ரல், 2012


சொல் அமைப்பில் ஒரு சொல்லாக வந்தாலும் இரண்டு (அ) மூன்று பொருளுடன் விளங்கும் கவிதை சிலேடை எனப்படும்.

கவி காளமேகத்தின் சிலேடை பாடல்:

வாரிக் களத்தடிக்கும் வந்தபின்பு கோட்டைபுகும்
போரிற் சிறந்து பொலிவாகும் - சீருற்ற
செக்கோல் மேனித் திருமலைராயன் வரையில்
வைக்கோலும் மால்யானை ஆம்.

விளக்கம்:

வாரிக் கள‌த்தடிக்கும் – கதிர் அறுவடை செய்து பின்னர் களத்துமேட்டிற்கு வந்து நெற்களை பிரிப்பதற்கு அடிக்கப்படும் (வைக்கோல்) / எதிரிகளை தன் துதிக்கைகளாலே தூக்கி போர் களத்தில் அடித்து கொள்ளும் (யானை)

வந்தபின் கோட்டைபுகும் – வைக்கோலில் இருந்து நெல்லை பிரித்த பிறகு, அதனை சேகரித்து கோட்டைக்குள்ளே வைக்கப்படும் (வைக்கோல்) / எதிரிகளை கொன்று விட்டு வெற்றி வாகையோடு எதிரியின் கோட்டைக்குள் புகும் (யானை)

போரிற் சிறந்து பொலிவாகும் – பெரிய வைக்கோல் போர்களாக அடுக்கி வைத்து சிறப்புற்று அழகாய் விளங்கும் (வைக்கோல்) / யானையின் அங்கம் போரில் முக்கியம் என்பதால், போரில் சிறந்து விளங்கி சிறப்பாக திகழும் (யானை)

இவ்வாறு சிறப்புற்ற சிவந்த தேகம் கொண்ட திருமலைராயன் மலைச்சாரலில் வைக்கோலும் யானையும் நிறைய இருக்கிறது என்று திருமலைராயன் மலையின் தானிய மற்றும் போர் வளத்தை சிலேடையாக பாடினார் கவி காளமேகம்.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012


குறள் 597:
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.

உரை:
உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.

சனி, 28 ஏப்ரல், 2012


பழமொழி: ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்.

இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் - ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால், பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும்.

இக்கருத்து சரியானதா என்று பார்ப்போம். இங்கே பெரியவர் என்பது உருவத்தால் மட்டுமின்றி செல்வாக்கு, பணபலம், புகழ் போன்றவற்றால் பெருமை உடையவர்களைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். சிறியவர் என்பது உருவத்தால் மட்டுமின்றி செல்வாக்கு, பணபலம், புகழ் ஆகிய எதுவுமே கொஞ்சம்கூட இல்லாத மிகச் சாதாரண நிலையில் உள்ளவர்களையும் குறிப்பதாகக் கொள்ளலாம். மொத்தத்தில் இப்பழமொழி உணர்த்த வரும் கருத்துப்படி பார்த்தால் நல்லகாலம் என்பது அனைத்து வகையான மக்களுக்கும் வாழ்க்கையில் ஒரு கட்டத்திலாவது வரவே செய்யும் என்பதே.

ஆனை போல பெரியவர்களானாலும் சரி, பூனை போல சிறியவர்களானாலும் சரி, நன்மை மட்டுமல்ல தீமையும் அனைவருக்கும் நடக்கும். இதைத்தான் "தீதும் நன்றும் பிறர்தர வாரா"  என்று புறநானூற்றிலேயே கூறிவிட்டனர். ஆக, இக் கருத்து ஓரளவுக்குத் தான் சரியாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் இக்கருத்தினை நேரடியாகக் கூறாமல் ஆனையினையும் பூனையினையும் பயன்படுத்திக் கூறி இருப்பதன் தேவை என்ன?. இக்கருத்து உருவான பின்புலம் என்ன? இதைப் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

மேற்காணும் விளக்கத்தை தவிர, வேறு ஒரு விளக்கமும் கூறப்படுகின்றது... இக் கருத்தினை முன்மொழிவோர், ஆனை என்பதனை ஆநெய் என்பதின் திரிபு என்றும் பூனை என்பதனை பூநெய் என்பதின் திரிபு என்றும் கொண்டு, இப்பழமொழியை

ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால்
பூநெய்க்கும் ஒரு காலம் வரும்.

என்று மாற்றிக் கொண்டு கீழ்க்கண்டவாறு பொருள் கூறுகின்றனர்.

ஆநெய் ஆகிய பசுநெய்யினை ஒரு காலத்தில் உண்டால் பூநெய் ஆகிய தேனையும் ஒரு காலத்தில் உண்ணவேண்டி வரும்.

அதாவது, பசுநெய்யினை உணவுடன் சேர்த்து அதிகம் உண்டால் அதனால் உண்டாகும் கொழுப்பினைக் குறைக்க அதன்பின்னர் தேனை உண்ண வேண்டி வரும் என்று விளக்கம் கூறுகின்றனர்.

இக் கருத்து ஏற்புடையதாகத் தோன்றவில்லை. ஏனென்றால், பசுநெய் மட்டுமல்ல, கொழுப்பை உண்டாக்கும் பல எண்ணைப் பலகாரங்களையும் மாமிச உணவுகளையும் நாம் (கொழுப்பு என) அறிந்தே தான் உண்கிறோம். இருந்தாலும் அதனைக் குறைப்பதற்கு நாம் தேனையா உட்கொள்கிறோம்?. இல்லையே. மேலும் நெய்யும் தேனும் உணவுப்பொருட்களே. இதில் எதை அதிகம் உண்டாலும் சிக்கல் வரும். அதனால் தானே "அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு" என்று கூறினர் பெரியோர். எனவே இப்பழமொழி இங்கே உணவுப் பொருட்களைக் குறித்து வரவில்லை என்பது தெளிவாகிறது.

வேளாண்மையே மக்களின் அடிப்படைத் தொழில் என்பதால் இது தொடர்பாக பல பழமொழிகள் வழக்கில் எழுந்தன. வேளாண்மைத் தொழிலை அடிப்படையாகக் கொண்டு எழுந்த பழமொழிகள் பலவற்றுள்ளும், நமது தலைப்புப் பழமொழிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இப்பழமொழியானது வேளாண்மைத் தொழிலில் பயன்படுத்தப்படும் விலங்குகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

வேளாண்மைத் தொழிலில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் விலங்கு "எருது" என்பது அனைவருக்கும் தெரியும். உழவு மாடாகவும் வண்டி மாடாகவும் பெரிதும் பயன்படுவது எருதே ஆகும். பல நேரங்களில் விளைந்த நெற்கதிர்களை கதிரடிக்கவும் இவற்றைப் பயன்படுத்துவர். ஆனால், விளைச்சல் அதிகமாக இருந்தால், யானைகளையும் கதிரடிக்கப் பயன்படுத்துவர். இதன் அடிப்படையில் எழுந்தது தான் கீழ்க்காணும் பாடல்:

"மாடு கட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல் என்று
ஆனை கட்டிப் போரடிக்கும்
அழகான தென்மதுரை."

மிக அழகான இப்பாடலை இயற்றியது யார் எனத் தெரியவில்லை. ஆனால், தென்மதுரையில் உழவுத் தொழில் எவ்வளவு செழித்திருந்தது என்பது மட்டும் இப்பாடலின் மூலம் நன்கு தெரிகிறது.

இப்படி யானைகளைக் கொண்டு கதிரடித்த பின்னர், பிரிந்த நெல்மணிகளைத் தனியாக எடுத்துத் தானியக் கிடங்குகளில் சேமித்து வைத்திருப்பர். இப்போது தான் சிக்கல் துவங்குகிறது. சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்த நெல்மணிகளைக் குறிவைத்து எலிகளின் பட்டாளம் படையெடுக்கத் துவங்குகின்றது. ஒவ்வொரு எலியும் தனக்குத் தேவையானதை விட ஐந்து மடங்கு தானியத்தை அள்ளிக் கொண்டு செல்லுமாம். இதனடிப்படையில் தான்,

"அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி"

என்ற பழமொழியே எழுந்தது எனலாம். கூட்டம் கூட்டமாக இவை புகுந்து நெல்மணிகளைத் திருடிக் கொண்டு செல்வதை அப்படியே விட்டுவிட்டால், கிடங்கையே காலி செய்து விடும். எனவே இந்த எலிகளைக் கூண்டோடு ஒழிக்க, பூனைகளைக் கொண்டுவந்து தானியக் கிடங்குக்குள் வைப்பர். பூனைகளும் கிடங்கிற்குள் வருகின்ற எலிகளை வேட்டையாடித் தின்றுவிடும்.

இவ்வாறாக கதிரடிக்கும் காலத்தில் யானையின் உதவியும் சேமிக்கும் காலத்தில் பூனையின் உதவியும் மனிதருக்குத் தேவைப்பட்டது. இதைத்தான்,

ஆனைக்கு (யானைக்கு) ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்.

என்று கூறிச் சென்றுள்ளனர் நம் முன்னோர். இப் பழமொழியில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய இன்றியமையாத செய்தி என்னவென்றால்:

மிகப் பெரிய யானைகள் மட்டுமே பயன் தருபவை அல்ல.
மிகச் சிறிய பூனைகளும் தான். எனவேதான், உருவு கண்டு எள்ளாமை வேண்டாம் என்று திருவள்ளுவர் திருக்குறளில் கூறியுள்ளார்...

வெள்ளி, 27 ஏப்ரல், 2012



சங்க காலத்தில் எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.

"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை."

- கணக்கதிகாரம்

விளக்கம் :
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம்...

சிறு முட்களின் எண்ணிக்கை "0" அல்லது "5" ஆகிய இரு எங்களை கொண்டு முடிந்தால் மட்டுமே ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுத்தால் முழு எண்ணாக விடை வரும்.

என்னுடைய தனிப்பட்ட கருத்தின்படி, ஒன்று, சிறு முட்களின் எண்ணிக்கை "0" அல்லது "5" ஆகிய இரு எண்களில்தான் முடிய வேண்டும் அல்லது வரும் விடையினை முழு எண்ணாக மாற்ற வேண்டும்... இவை இரண்டில் ஒன்று சரியாக இருக்க வேண்டும்.


திங்கள், 23 ஏப்ரல், 2012


பழமொழி: குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படணும்

மோதிரம் போட்டிருப்பவரின் கைகளால் குட்டுப்படலாம் தப்பில்லை என்பதுதான் இதற்கான பொருள் என்று சிலர் இதற்க்கு அர்த்தம் கூறுகின்றனர்.

நம் தலையில் குட்டுபவர் மோதிரம் போட்டிருந்தால் என்ன காப்பு போட்டிருந்தால் என்ன? மோதிரம் போட்டிருப்பவர் கையை பின்புறமாக திருப்பிக் குட்டினால் மோதிரம் தலையில் பட்டு சில நேரங்களில் காயம் கூட ஏற்படலாம். அப்படி இருக்கையில் மோதிரம் அணிந்தவரின் கையால் குட்டுப்படுவதில் என்ன பெருமை இருக்கிறது?
மேலும் நாம் தவறு ஏதும் செய்யாத போது அவரிடம் ஏன் குட்டு வாங்கணும்? இப்படி எல்லாம் நினைக்கத்தோன்றுகிறதுதானே.

ஆனால் இதற்கு உண்மையான பொருள் - உயர்ந்த இடத்தில் உள்ள ஒருவரின் கையால் பாராட்டுப்பெறுவது என்பதுதான் இதன் உண்மையானப் பொருள். அப்படி பாராட்டு வாங்கும் போது நமக்கு எளிதில் அங்கீகாரம் கிடைப்பதோடு நமக்கும் பாராட்டும் புகழும் விரைவில் வந்து சேரும்.

உதாராணமாக, பாடலாசிரியராக வரவேண்டும் என்று விரும்பும் ஒரு கவிஞருக்கு இசையில் சிறந்த புகழ்ப்பெற்ற இசையமைப்பாளர் ஒருவர் அங்கீகாரம் கொடுத்து அவர் திறமையை பிறர் அறிய வெளிச்சம் போட்டு காட்டுவதை உதாரணமாகக் சொல்லலாம்.

தோன்றின் புகழோடு தோன்றுதல் என்கிறார் வள்ளுவர்.
மோதிரக்கையால் குட்டுப்பட யாருக்குதான் ஆசை இருக்காது?

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012


பாடல்:
சொல்லாம லேபெரியர் சொல்லிச் செய்வர்சிரியர்
சொல்லியுஞ் செய்யார் கயவரே நல்ல
குலமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடில்
பலாமாவைப் பாதிரியைப் பார்

மேற்கூறிய பாடலை எழுதியவர் ஔவையார் அவர்கள்...

பொருள்:
பிறர் கேட்காமலேயே உதவுபவர்கள் உயர்ந்தவர்கள், வண்மையானவர்கள்... பிறர் கேட்ட பிறகு உதவுபவர்கள் சிறியவர், சாதாரணமானவர்கள்... பிறர் கேட்ட பின்பும் உதவாமல் இருப்பவர் கயவர்கள், பெருந்த்தன்மையற்றவர்கள்...

இவர்கள் பலா, மா மற்றும் பாதிரி மரங்களை போன்றவர்கள்... பலாமரம் தான் பழம் தரப்போவதை "பூ" பூத்து அறிவிக்காமல் காய் காய்க்கும்... மாமரம் தான் பழம் தரப்போவதை "பூ" பூத்து அறிவித்து காய் காய்க்கும்... பாதிரி மரம் "பூ" பூக்கும் ஆனால் காய் கைக்காது...

வியாழன், 19 ஏப்ரல், 2012

நாராய்! நாராய்... செங்கால் நாராய்...


காலை சூரிய உதயத்தின் போதும், மாலை அந்தியின் போதும் பொன்னை வாரி இறைத்தது போல வானம் தங்க நிறம் தரித்துக் காணப்படும். நகர வாழ்க்கை ஓட்டத்தில் விழுந்துவிட்ட பலரும் சூரிய உதயத்தை பார்ப்பதேயில்லை. அதிகபட்சம் அவர்கள் மாலை நேரத்தை பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். இப்படி பொன் வாரி இறைக்கப்பட்ட காலை, மாலை நேரங்கள் நமக்குள் சக்தியை ஏற்றி புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இப்படிப்பட்ட தருணங்களை மறக்க முடியாத அனுபவமாக ஆக்கிவிடும் பண்பு பறவைகளுக்கு உண்டு.

உண்மையில் பறவைகளிடம் இருந்தே பல விஷயங்களை மனித இனம் கற்றுக் கொண்டது. ‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’ என்ற திரைப்பாடல் வரி, அதில் ஒன்றை மட்டும் பதிவு செய்துள்ளது. உண்மையில் இயற்கை சீராக இயங்குவதற்கான செயல்பாடுகளில் பறவைகள் பெரும் பங்கு செலுத்துகின்றன. அந்த செயல்பாடுகள் பற்றி அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை.

மக்களின் வாழ்க்கையுடன் பறவைகள் இரண்டறக் கலந்துள்ளன. இயற்கை மீதும், பறவைகள் மீதும் பண்டை காலம் முதல் தமிழர்கள் காட்டி வந்த ஆர்வம் பல்வேறு வகைகளில் பதிவாகியுள்ளது. தற்போது உள்ளதைப் போல சுற்றுச்சூழல் விழிப்புணர்வோ, அறிவியல் வளர்ச்சியோ இல்லாத காலத்தில், தமிழர்களின் வாழ்க்கையில் இருந்து இயற்கை கூறுகள் பிரிக்க முடியாததாக இருந்து வந்தது.


அதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு சத்திமுற்றப் புலவரின் ‘நாராய், நாராய்’ என்று தொடங்கும் சங்கப்பாடல். அந்தப் பாடல் –

"நாராய், நாராய், செங்கால் நாராய்,
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்!
நீயும் நின்பெடையும் தென்திசைக் குமரிஆடி
வடதிசைக்கு ஏகுவீர் ஆயின், எம்மூர்
சத்திமுத்தம் வாவியுள் தங்கி..." -என்று போகிறது.

இந்தச் செய்யுள் வரிகளில் சிவப்பு கால்கள், பவளச்சிவப்பு நிறத்துடன் பனங்கிழங்கைப் பிளந்தது போல நீண்டு காணப்படும் அலகைப் பற்றி புலவர் வர்ணிக்கிறார். இந்த குறிப்புகளைக் கொண்டு பார்க்கும்போது புலவர் குறிப்பிடும் பறவை செங்கால் நாரையாக (White Stork) தான் இருக்க வேண்டும். செங்கால் நாரையை தெளிவாக வர்ணிப்பது மட்டுமின்றி, அப்பறவையின் இடப்பெயர்வு பண்புகளையும் புலவர் காட்சிப்படுத்தியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் குளிரால் பனி போர்த்தப்படும்போது, உணவு தேடி பல பறவைகள் இந்தியாவுக்கு வருகின்றன. ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில் பறவைகள் மேற்கொள்ளும் இந்த இடப்பெயர்வு ‘வலசை போதல்’ என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த வலசை போதலை மேற்கண்ட செய்யுள் 18 நூற்றாண்டுகளுக்கு முன்பே பதிவு செய்துள்ளது. இயற்கை வரலாற்று குறிப்புகளை புலவர்கள் உவமையாகப் பயன்படுத்தியுள்ளனர். அந்தச் செய்யுளின் முதல் ஆறு வரிகளில் இயற்கை வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு முன்பே இது பற்றி அந்தச் சமூகத்தில் விழிப்புணர்வு இருந்திருக்க வேண்டும். பறவைகளின் பெயர் முதல் வலசை போகும் பண்பு வரை பல்வேறு அம்சங்களை பண்டைத் தமிழர்கள் கூர்ந்து நோக்கி, பதிவு செய்துள்ளனர்.

(குறிப்பு: மேற்கண்ட செய்யுளை எழுதிய புலவரின் பெயர் தெரியவில்லை. சங்க இலக்கியத்தில் பல செய்யுள்களை எழுதிய புலவர்களின் பெயர் இல்லை. மேற்கண்ட செய்யுளில் அவர் கூறியுள்ள சத்திமுத்தம் என்ற ஊரின் பெயராலேயே இந்தச் செய்யுளை எழுதிய புலவர் சத்திமுற்றப் புலவர் என்றழைக்கப்படுகிறார்).


செவ்வாய், 10 ஏப்ரல், 2012


"க" கர வரிசை மட்டுமே கொண்ட பாடல் இது...

பாடல்:
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.

பொருள்:
காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ (அரசன்) பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட (கைக்கு ஐக்கு ஆகா) கையாலாகிவிடக்கூடும்.

காளமேகப் புலவர் எழுதிய பாடல் இது...

சனி, 7 ஏப்ரல், 2012


பாடல்:
நாபிளக்க பொய்யுரைத்து நவநிதியம் தேடி
நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடி
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போல
புலபுலென கலகலெனப் புதல்வர்களை பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவு மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையிற் கால்நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனை போல
அகப்பட்டீரே கிடந்துழல அகப்பட்டீரே...

பொருள்:
நாக்கு பிளந்துபோகுமலவிர்க்கு பொய்களை பேசி செல்வந்தனை சேர்த்து, இது நல்லது இது கேட்டது என்று தெரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாத பெண்ணை திருமணம் செய்துகொண்டு, மண்ணிலிருந்து வெளிவருகின்ற புற்றீசல்களை போல பல குழந்தைகளை பெருகின்றீர்...

அவர்களை நன்றாக வளர்க்கவும் முடியாமல், கைவிட்டுவிட்டு செல்லவும் முடியாமல், பாதி அறுத்த மரத்தில் கால்தனை நுழைத்த பிறகு, அதில் வைத்திருந்த ஆப்பதனை அசைத்ததினால் மரத்திர்க்கிடையில் மாட்டிக்கொண்டு வெளியேரமுடியாமல் தவிக்கும் குரங்கின போல தவிக்கின்றீரே...

இப்பாடல் பட்டினத்தார் அவர்களால் எழுதப்பட்டது...

வெள்ளி, 6 ஏப்ரல், 2012


பாடல் 1:
அத்தமும் வாழ்வு மகத்துமட்டே விழி யம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மியிரு
கைத்தல மேல் வைத்தழு மைந்தருஞ்சுடு காடுமட்டே
பற்றி த் தொடரு மிருவினைப் புண்ணியம் பாவமுமே...

மேற்கூறிய பாடலை படித்தவுடன் எத்துனை பேருக்கு அதன் அர்த்தம் புரியம் என்று சொல்லயியலாது... அதன் அர்த்தம் புரியாதவர்கள் பின்வரும் பாடலை படித்தால் அதன் அர்த்தம் கண்டிப்பாக புரிந்துவிடும்...

பாடல் 2:
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

மேற்கூறிய இரண்டு பாடல்களும் ஒரே பொருளை உணர்த்துகின்றன...
முதல் பாடல் பட்டினத்தார் அவர்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது...

இரண்டாவது பாடல் கவியரசு கண்ணதாசன் அவர்களால் அரை  நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது...

ஒரே கருத்தினை காலத்திர்க்கேற்ப மக்கள் புரிந்துகொள்ளும் விதமாக இரண்டு கவிஞர்களும் எழுதியுள்ளது அவ்விரு பாடல்களின் தனிச்சிறப்பு...

புதன், 4 ஏப்ரல், 2012

தேன் ஈக்களால், மக்கள் தேன் சாப்பிடுகிறார்கள். மாடுகளால், மக்கள் பால் சாப்பிடுகிறார்கள். ஆடு, கோழிகளால் மக்கள் ஆகாரம் அடைகிறார்கள். நாய்களால் காக்கப்படுகிறார்கள். கழுதை, குதிரை முதலியவற்றால் பொதி சுமக்க வைத்தும் சவாரி செய்தும் பயனடைகிறார்கள். இப்படி எத்தனையோ ஜீவன்களால் எத்தனையோ பலன் அடைகிறார்கள். இவற்றால் இவை உயர்ந்த ஜீவனாகக் கருதப்படுகின்றனவா? இல்லை.

அப்படித்தான், மனித ஜீவனும், பல வழிகளில் பல காரணங்களால், வேறுபட்ட தன்மைகளால் ஒரு ஜீவனிடமிருந்து பிரிந்து காணப்படலாமே ஒழிய உயர்ந்த ஜீவனாகிவிடமாட்டான்.

- தந்தை பெரியார்

பழமொழி: பசி வந்தால் பத்தும் பறந்து போகும்

மூதுரை என்னும் நூலில் ஔவையார் அவர்கள் எழுதிய பாடல் பின்வருமாறு.

மானம் குலம் கல்வி வன்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தளன்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திட பறந்து போகும்.

பசி வந்தால் பறந்துபோகும் பத்து என பின்வருவனவற்றை ஔவையார் கூறுகிறார்.

மானம்
குலம்
கல்வி
வன்மை
அறிவுடைமை
தானம்
தவம்
உயர்ச்சி (பதவி)
தளன்மை (இளகிய மனம்)
காமுறுதல்

திங்கள், 2 ஏப்ரல், 2012


பழமொழி: பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க...!!!

பெரியவர்கள் சிறியவர்களை வாழ்த்த பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தும் ஒரு பழமொழி...

பதினாறு குழந்தைகள் பெற்று நன்றாக வாழவேண்டும் என்று விளையாட்டாக சிலர் பொருள் கொல்வதுமுண்டு...

வாழ்க்கையில் பெற வேண்டிய பதினாறு என்ன என்பதை ஒரு பாடலில் கூறியுள்ளனர்...

துதிவாணி வீறு விசயம் சான்தனம் துணிவு
தனம் மதி தானியம் சௌபாக்கியம் போகம் அறிவு
அழகு பெருமை ஆறாம் குலம் நோய்கள்பூண் வயது
பதினாறு பேரும் தருவாய் பராபரமே...

துதிவாணி
வீறு
விசயம்
சான்தனம் (குழந்தை பேறு)
துணிவு
தனம்
மதி
தானியம்
சௌபாக்கியம்
போகம்
அறிவு
அழகு
பெருமை
அறம்
குலம்
நோய்கள்பூண் வயது (நோயற்ற நெடு வாழ்வு)

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012


ஔவையார் - இந்த பெயரை கேட்டவுடனேயே நம் கண்முன் தோன்றுவது பழம்பெரும் நடிகை கொ.பா.சுந்தராம்பாள் (K.B.Sundarambal) அவர்கள்தான்...

ஆனால், ஔவையார் அவர்கள் எழுதிய நூல்களின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால், ஔவையார் என்ற பெயரில் மூன்று பெண் புலவர்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்துள்ளதாக அறியப்படுகிறது...

முதல் ஔவையார் - இவர் சங்க காலத்தில் வாழ்ந்தவர். இவருக்குதான் தகடூர்-ஐ ஆண்ட அதியமான் நெடுமனஞ்சி தான் பெற்ற சாகாவரம் கொடுக்கும் நெல்லிக்கனியினை கொடுத்தார்.

அதற்க்காக, பின்வரும் பாடலை ஔவையார் அதியமான் நெடுமனஞ்சி பற்றி பாடினார். இந்த பாடல் புறநானூறில் இடம் பெற்றுள்ள பாடல்.

வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடி தடக்கை,
ஆர்கலி நறவின், அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின்னகத்து அடக்கிச்,
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.

இரண்டாம் ஔவையார் - இவர் ஒன்பது-பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பின்வரும் நூல்கள் அவரால் எழுதப்பட்டவை.

ஆத்திச்சூடி
கொன்றைவேந்தன்
மூதுரை
நல்வழி

இவர் முதல் ஔவையார் இல்லை என்ற முடிவிற்கு வர காரணம்:
நல்வழி நூலில் நாற்பதாவது பாடலில், திருமூலர், தேவாரம், திருவாசகம் ஆகியவை மேற்க்கோள் காட்டப்பட்டுள்ளன. ஆகையினால் அவர் ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்திருக்க வாய்ப்பு இல்லை. மேலும், யாப்பருங்கலம் என்னும் நூலில் கொன்றைவேந்தன் மேற்கோளாக காட்டப்பட்டுள்ளது. ஆகையினால் அவை பன்னிரெண்டாம் நூற்றாண்டிர்க்குப்பின் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை.

மூன்றாவது ஔவையார் - இவர் கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி போன்ற புலவர்கள் வாழ்ந்த பன்னிரெண்டாம்-பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பின்வரும் நூல்கள் அவரால் எழுதப்பட்டவை.

நானக் குறள்
விநாயகர் அகவல்
கல்வியோழுக்கம்
அருந்தமிழந்தாதி
அகத்துக்கொவை
நன்மணிமாலை

இவர் மூன்றாவது ஔவையார் என்ற முடிவிற்கு வர காரணம்: கம்பருக்கும் இவருக்கும் நடந்த புலமைப் போட்டி. "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" என்ற வரிகள் அந்த விவாதத்தின்போது அவர் கூறியது.

சனி, 31 மார்ச், 2012


குறள் 597:
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.

உரை:
உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.

புதன், 28 மார்ச், 2012


குறள் 583:
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்.

உரை:
நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை.

திங்கள், 26 மார்ச், 2012


பழமொழி: அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.

சிறிது சிறிதாக நகர்த்தினால் அம்மியும் நகரும் என்பதுதான் இதற்கான பொருள். அம்மி கனமாக பொருள். அதை அவ்வளவு எளிதில் நகர்த்திட முடியாது என்பது அம்மியைப் பார்த்த அனைவருக்குமே தெரியும். ஏன் அம்மியை அடிக்க வேண்டும்? மூன்று நான்கு பேராக எளிதில் தூக்கி வைத்து விட்டுப் போகலாமே என்று தோன்றுகிறதுதானே.

ஆனால் இது அம்மியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் தூக்கி வைக்க சொன்ன பழமொழி அல்ல.

அப்படியானால் வேறு எதற்காக சொல்லப்பட்டது?

அடிமேல் அடி வைத்தால் அம்மியும் பகரும்.

வீட்டின் மூலையில் பெரும்பாலான நேரங்களில் சும்மா கிடக்கும் பொருளான அம்மிக்கல் அல்லது அக்கல்லைப் போன்ற வடிவமுடைய பிற கற்களும், தேர்ந்த சிற்பி ஒருவனால் அடித்து அடித்து சிலையாக்கினால் அச்சிலைக்கு உயிர் வந்து பகரும் அதாவது பேசும் என்பதுதான் இதற்கான பொருள்.

இங்கே பகர்த்தல் என்பது பேசுவதைக் குறிக்கிறது. கண்கள் பேசுகின்றன என்பது போல் சிலை பேசும் என்பதைதான் அம்மியும் பகரும் என்று குறிப்பிடுகிறார்கள்.அழகான சிலை என்பதை விட அற்புதமான சிலை அதனுடைய ஒவ்வொரு பாகமும் எதையோ சொல்கின்றன என்பதைதான் அம்மியும் பகரும் என்றனர்.

இது போல் அறிவில்லாத ஒருவனையும் சொல்லிச் சொல்லி நல்லவனாக்க முடியும் என்பதை பழமொழியின் உட்கருத்தாக எடுத்துக் கொள்ளலாம்.

ஞாயிறு, 25 மார்ச், 2012

குறள் 572:
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.

உரை:
அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்.

வெள்ளி, 23 மார்ச், 2012


பழமொழி:

"அடுக்களை குற்றம் சோறு குழைந்தது
அகமுடையான் குற்றம் பெண்ணாய் பிறந்தது".

சோறு குழைந்து போனதற்கு அடுப்பங்கரை செய்த பிழை என்று முதல் வரிக்கு மேலோட்டமாகப் பொருள் புரிந்து கொண்டாலும் அது அடுப்பு செய்த குற்றம் அல்ல. பதம் தெரியாமல் அடுப்பில் அதிகமாய் அதை குழைய வேக விட்டது சமையல் செய்த பெண்ணின் குற்றமாகும். அடுப்பில் சோறு வைத்த ஞாபகமே இன்றி அதை கவனிக்காமல் விட்டதும் அப்பெண் செய்த தவறாக எடுத்துக் கொள்ளலாம்.

இரண்டாவது வரியில் உள்ள அகமுடையான் என்ற சொல் கணவனைக் குறிக்கிறது. அவன் செய்த குற்றம் என்ன? அவன் செய்த பாவத்தின் காரணமாகத்தான் பெண் பிள்ளை பிறந்தது என்று நேரடி பொருளை எடுத்துக்கொண்டால் அது தவறு.

நாம் செய்யும் பாவ புண்ணியத்துக்கு ஏற்றபடியெல்லாம் குழந்தைப் பிறப்பதில்லை. அப்படி பாவம் செய்தால் பெண் குழந்தையும், புண்ணியம் செய்தால் ஆண் குழந்தையும் பிறக்குமா என்ன?

இந்த வரிக்கு அது பொருள் அல்ல.
ஆண், பெண் குழந்தைகள் பிறப்பதற்கும் கணவன்தான் காரணம் என்ற உண்மை திருமூலரில் தொடங்கி, நம் ஆதி தாத்தாவுக்கும் பாட்டிக்கும் தெரிந்திருக்கிறது.

இன்றைய அறிவியல் 46 எக்ஸ்(X) / ஒய்(Y) என்பது ஆண்களுக்கே உரிய குரோமோசோம்கள் என்று குறிப்பிடுகிறது.

பெண்களுக்கு எப்போதும் எக்ஸ்(X) / எக்ஸ்(X) என்ற குரோமோசோம்கள்தான் இருக்கும். இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் தாய்மை அடைய முடியும். அப்படி இல்லாமல் ஆண்களுக்குரிய 46 எக்ஸ்(X) / ஒய்(Y) என்ற குரோமோசோம் அபூர்வமாக இருந்தால் அப்பெண்ணுக்கு குழந்தைப் பிறக்காது.

ஆணிடம் உள்ள எக்ஸ்(X) / ஒய்(Y) என்ற இரண்டு குரோமோசோமில் கலவியின் போது எது பெண்ணிடம் போய் சேருகிறதோ அதைப் பொறுத்துதான் ஆண், பெண் குழந்தைகள் பிறப்பு நிகழ்கின்றன.

ஆணிடம் உள்ள ஒய்(Y) குரோமோசோம் பெண்ணிடம் போய் சேர்ந்தால் அப்போது (ஒய்யும்(Y) எக்ஸும்(X) சேர்ந்து) ஆண் குழந்தை உருவாகிறது.
அப்படியில்லாமல் ஆணிடமுள்ள எக்ஸ்(X) போய் சேர்ந்தால் ஏற்கனவே பெண்ணிடம் நிரந்தரமாக உள்ள எக்ஸுடன்(X) சேர்ந்து(இரண்டு எக்ஸ் (X) சேர்ந்தால்) பெண் குழந்தை பிறக்கிறது.

திருமூலர் தன் பாடல் ஒன்றில்

"ஆண் மிகில் ஆண் ஆகும்
பெண் மிகில் பெண் ஆகும்
பூண் இரண்டு ஒத்துப் பொருந்தில்
அலியாகும்
தாள்மிகும் ஆயின்
தரணி முழுவதும் ஆளும்
பாழ் நவம் மிக்கிடின்
பாய்ந்ததும் இல்லையே" என்கிறார்.

இதற்கான பொருள் ஆணுக்குரிய ஒய்(Y) குரோமோசோம் பாய்ந்தால் ஆண் குழந்தையும், பெண்ணுக்குரிய எக்ஸ்(X) குரோமோசோம் சென்றால் பெண் குழந்தையும் பிறக்கும்.

இவை இரண்டும் இன்றி ஆணிடமிருந்து எக்ஸ்(X) ஒய்(X) இரண்டும் சேர்ந்து சென்றால் திருநங்கைகள் பிறக்கிறார்கள்(அலி)என்றும்,
விந்துவில் உயிர் அணு இல்லாவிட்டாலும், பெண்ணிடம் மாதந்தோறும் கருமுட்டையே உருவாகாமல் போனாலும் குழந்தையே பிறக்காது என்பதை "பாழ் நவம் மிக்கிடின் பாய்ந்ததும் இல்லையே..." என்கிறார்.

அறிவியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதுதான் இப்பழமொழி.
சாப்பாடு குழைந்ததற்கு வேண்டுமானால் பெண் காரணமாக இருக்கலாம். ஆனால் பெண் குழந்தைப் பிறந்ததற்கு பெண் காரணமல்ல, அவளது கணவனே என்பதைதான் இப்பழமொழி நமக்கு எடுத்துச் சொல்கிறது.

ஞாயிறு, 18 மார்ச், 2012


குறள் 561:
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

உரை:
நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்.

வியாழன், 15 மார்ச், 2012



உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் சிறப்புகளுள் 'ழ' கரமும் ஒன்று. அது மட்டுமல்லாமல் ண,ற, ள என்னும் எழுத்துகளும் தமிழின் தனிச் சிறப்புகளாம். பொதுவாக ழ, ல மற்றும் ள என்னும் மூன்று எழுத்துகளும் இன்று தமிழ் கூறும் நல்லுலகத்தின் நாவுகளில் ஒரே எழுத்தாகிவிட்டன. இனத்திலும், சாதியிலும், மததிலும், நிறத்திலும், பணத்திலும் வேற்றுமைகளை மிகத்தீவிரமாகக் கடைபிடிப்பவன் உச்சரிப்பில் மட்டும் ஒற்றுமையைப் பேணுகிறான். இனத்தில் வேறுபாடு இருந்தால் போதாதா, எழுத்தில் வேறு வேண்டுமா என நினைக்கிறானோ என்னவோ?

வெள்ளம் என்று சொல்வதைக் கேட்டு எழுதும் போது எந்த 'ல' என்று கேட்கிறான்.

தமிழில் ஒரே 'ள' தான் இருக்கிறது என்று அழுத்தந்திருத்தமாக ஒலித்துக்காட்டினாலும் 'ள' என்று ஒலி வேறுபாடுறக் கூறப்படுவதை அவனால் விளங்கிகொள்ள முடியவில்லை. ல, ள மற்றும் ழ இடையிலான ஒலி வேறுபாடு அவனுக்குப் புரியமாட்டேனென்கிறது.
எளிமையான ஒரு பயிற்சியை இங்கு கற்றுத்தருகிறேன். ல,ள,ழ ஆகிய மூன்று எழுத்துகளையும் அவற்றின் ஒலிப்பையும் எளிதில் நினைவு வைத்துக் கொள்ள இது உதவும்.

'ல்' என்னும் எழுத்துக்குப் 'பல்' என்னும் சொல்லை நினைவில் வைத்துக் கொள்ளவும் . 'ல்' என்று சொல்லும் போது நுனி நாக்கு மேல்வரிசை முன்பல்லின் பின்புறம் படவேண்டும்.(சொல்லிப் பார்க்கவும்)

'ள்' என்னும் எழுத்துக்குப் 'பள்ளம்' என்ற சொல்லை நினைவில் வைத்துக் கொள்ளவும். 'ள்' என்று சொல்லும் போது நுனிநாக்கானது மேல்வரிசை முன்பற்களின் உள்புற ஈறுகளுக்கு மேற்பகுதியில் அமைந்துள்ள பள்ளம் போன்ற பகுதியில் பட வேண்டும் . (சொல்லிப் பார்க்கவும்)

'ழ்' என்னும் எழுத்த்க்குப் பழம் என்ற சொல்லை நினைவில் வைத்துக் கொள்ளவும். வாழைப் பழத்தை விழுங்குவது போல உள்ளிழுத்து மடக்கவும்.

பல்-பள்ளம்-பழம்..... இது ஓர் எளிமையான பயிற்சி! இப்பயிற்சிகளை ஒரு பயிலரங்கில் கற்றுக் கொடுக்கும்போது, மூன்றாம் வகுப்புப் படிக்கும் மாணவியொருத்தி (சங்கீதா என்று நினைவு) கேட்டாள்:
"பல் என்று சொல்லும்போது நாக்கு பல்லில் பட வேண்டும் என்கிறீர்கள்! அப்படியானால் 'கல்' என்று சொல்லும்போது நாக்கு கல்லில் படவேண்டுமா?" நம் குழந்தைகளின் புத்திகூர்மையும் நகைச்சுவையும் சமயோஜிதமும் வியக்க வைக்கின்றன. இது போன்ற பல சொற்களையும், தொடர்களையும் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பார்க்கவும். உதாரணத்திற்குச் சில:

--- கல், நில், மலை, கலை, கள், வெள்ளை, மக்கள், விழை, வாழ்க்கை, ஆழி
--- வாழைப்பழத்தோல் வழுக்கி ஏழைக்கிழவன் கீழே விழுந்தான்
--- அவன் நல்லவன் அல்லன்
--- கல்லிலிருந்து எடுத்தான்
--- சொல்லொன்று சொல்லேன்
--- தள்ளும் உள்ளம்
--- தள்ளாடித் தள்ளாடிச் சென்றான்
--- பள்ளத்தில் உள்ள முள்ளெடு
--- கீழே விழுந்து அழுதான்
--- கொழுகொழுத்த வாழை

மேற்காண் தொடர்களெல்லாம் ஒரேவகையான எழுத்தை ஒலித்துப் பழக உதவும். இதற்கு "நாநெகிழ் பயிற்சி" என்று பெயர். வேறுபட்ட ஒலிகளையுடைய எழுத்துகள் கலந்து வரும் சொற்களையும், தொடர்களையும் ஒலித்துப் பழகுவதர்கு "நாபிறழ் பயிற்சி" என்று பெயர்.

உதாரணங்கள்:

--- தொழிலாளி
--- மேல் ஏழு ஓலை, கீழ் ஏழு ஓலை
--- பலாப்பழம் பழுத்துப் பள்ளத்தில் விழுந்தது

நெற்றிக்குப் பொட்டிட்டு, விழிகளில் மையிட்டு, முகத்தில் நறுமணத் தைலமும் பொடியும் பூசி, இமைகளில், உதட்டில், கன்னங்களில், கூந்தலில், நகங்களில் வன்ணமிட்டு, கழுத்து, காது, மணிக்கட்டில் பொன், வெள்ளி அணிகள் பூட்டி, நகங்களை சீராக்கி, தலைமுடி நறுக்கி, கண்கவர் ஆடைகளையும் , கண்கண்ணாடிகளையும் குளிர்சாதன விற்பனையகங்களில் ஐந்துமணிநேரம் பொறுக்கிக் கழித்து எடுத்துத் தள்ளி, சோர்ந்து தேர்ந்து வாங்கி அணியும் நாம் மிகுந்த அழகுணர்ச்சியும் ரசனையும் கொண்டவர்கள் தான். ஆனால் வாயிலிருந்து வெளிப்படும் மொழியும் அதே போல அழகுடன் இருப்பதன் சுகத்தையும், சுவையையும் உண்ர்ந்தால்தான் நமது அழகுணர்ச்சியும் ரசனையும் முழுமை பெறும்...


படித்ததில் பிடித்தது:

உங்கள் பெற்றோரை...
அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்...
இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை...

ஞாயிறு, 11 மார்ச், 2012


எனது கிறுக்கல்கள்:

சில குழந்தைகள் மனதில்...

தன்னை மடியில் தவழ விடாமல் மடிக்கணினியை மடியில் போட்டு தாலாட்டிக்கொண்டிருக்கும் தாய்...

தன் முகத்தை பாராமல் முகப்புத்தகத்தை நாளெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் தந்தை...

தன்னை கண்டு பரிதாபப்படாமல்... செல்லம்மா, துளசி - இவர்களின் நிலையை கண்டு தினமும் பரிதாபப்படும் பாட்டி...

தன்னுடன் நேரம் கழிக்காமல், செய்திகள் பார்ப்பதும் படிப்பதும், தன் நண்பர்களுடன் பூங்காவில் விவாதிப்பதுமாக காலம் கழிக்கும் தாத்தா...

முதியோர் இல்லத்திற்கு ஒரு முன்னோட்டம்...

சனி, 10 மார்ச், 2012


தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247. இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.

அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்


 பழமொழி: சிவ பூசையில் கரடி

பூசை செய்யும்போது தடங்கல் வந்தால், சிவ பூசையில் கரடி வந்த மாதிரி என்று சொல்வார்கள். இதில் கரடி என்பது மிருகத்தை குறிக்காது. கரடி என்பது ஒரு வகை வாத்தியம். முற்காலத்தில் மன்னர்கள் சிவபூசை செய்யும் போது, கரடி என்னும் வாத்தியம் வாசிக்கச் செய்வர். இதைத்தான், சிவபூசையில் கரடி என்பர். ஆனால், பிற்காலத்தில் இதுவே பூசைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம் மாறி விட்டது.

வெள்ளி, 9 மார்ச், 2012


குறள் 551:
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.

உரை:
குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது.


தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி...

என்ற கவி காளமேகப் புலவரின் பாடலைப் பார்த்தால் சற்றுத் திகைக்க வேண்டி வரும். இதோ அதன் பொருள்:

தாதி - தோழியின் (அடிமைப் பெண்ணின்)
தூதோ- மூலமாக அனுப்பும் தூது
தீது - நன்மை பயக்காது!
தத்தை - (நான் வளர்க்கும்) கிளியோ
தூது - தூதுப் பணியில் தூதை
ஓதாது - (திறம்பட) ஓதாது
தூதி தூது - தோழியின் தூதோ
ஒத்தித்த தூததே - நாளைக் கடத்திக் கொண்டே போகும்.
தாதொத்த - (ஆகவே) பூந்தாதினைப் போன்ற
துத்தி - தேமல்கள்
தத்தாதே- என் மேல் படராது
தேதுதித்த - தெய்வத்தை வழிபட்டுத்
தொத்து - தொடர்தலும்
தீது - தீதாகும்
தித்தித்தது _ தித்திப்பு நல்கும் என் காதலனின் பெயரை
ஓதித் திதி - ஓதிக் கொண்டிருப்பதையே செய்வேனாக...

கவிஞர் கண்ணதாசன் 'வானம்பாடி' திரைப்படத்தில், இதே பாடலை:

நடுவர் - உன்னுடைய கேள்விக்கெல்லாம் அவங்க பதில் சொல்லிட்டாங்க இனிமேல் அவங்க கேள்வி கேக்கலாமில்லே?

ஆண் - கேக்க சொல்லுங்க....

பெண்:
தாதி தூது தீது தத்தும் தத்தை சொல்லாது..
தூதி தூது ஒத்தித்தது தூது செல்லாது..
தேது தித்தித் தொத்து தீது தெய்வம் வராது - இங்கு
துத்தி தத்தும் தத்தை வாழ தித்தித்ததோது..

ஆண் - கேள்வியா இது ? என்ன உளர்றாங்க ?

நடுவர் - அவங்க ஒண்ணும் உளறலே.. நீதான் திணர்றே

ஆண் - நான் திணர்றேனாவது..

நடுவர் - பின்ன என்ன? வேணும்னா நீ தோல்விய ஒப்புக்க.. அவங்களே அர்த்தம் சொல்றாங்க

ஆண் - முதல்ல அர்த்தத்தை சொல்ல சொல்லுங்க.. அப்புறம் பேசலாம்

நடுவர் - சரி சொல்லுங்க..

பெண்:
அடிமைத் தூது பயன்படாது கிளிகள் பேசாது
அன்புத் தோழி தூது சென்றால் விரைவில் செல்லாது
தெய்வத்தையே தொழுது நின்றால் பயனிருக்காது - இளம்
தேமல் கொண்ட கன்னி வாழ இனியது கூறு.

வியாழன், 8 மார்ச், 2012

மகளிர் தினம்: எனக்கு அகவேழுச்சி தந்த பெண்களில் ஒருவர்


பெண் குழந்தைகளுக்கு எட்டாக்கனியாக
கல்வி இருந்த காலத்தில் அதனை
எட்டிப்பரித்து சுவைத்து பார்த்தவர் நீ...

இயற்க்கை தந்த பருவம் என்னும் பதவியுயர்விர்க்காக
பள்ளி உனக்கு கல்வியினை மறுத்து வீட்டுச் சிறையினில் தள்ளியபோது
சிறைதனையே பள்ளியாக்கி கல்விக்கனவினை மெய்ப்பித்தவர் நீ...

காளைகள் மட்டுமே சீறிப்பாய்ந்துகொண்டிருந்த
உயர்கல்வி என்னும்  சல்லிக்கட்டில்
ஆழிப்பேரலை போல சீறிப்பாய்ந்து வெற்றிகண்ட காமதேனு நீ...

பல்லி, கரப்பான் போன்ற சிறய உயிரினங்களை கண்டு
எட்டு அடி பின்னால் சென்ற பெண்களுக்கு மத்தியில்
பதினாறு அடி முன்னே சென்று மனித உயிரினை காக்க
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரானவர் நீ...

ஆதரவற்ற குழந்தைகளுக்கும் கைம்பெண்களுக்கும்
உண்ண உணவும், உடுத்த உடையும், இருக்க இடமும் கொடுக்க
சென்னை அடையாரில் தமிழ் மூதாட்டி அவ்வையின் பெயரில்
தொண்டு நிறுவனம் நிறுவி அன்பின் பிறப்பிடமானவள்  நீ...

அரசியல் என்றால் கிலோ என்ன விலை
என்று கேட்ட பெண்கள் பலரிருக்க
ஆண் சிங்கங்களுக்கு மத்தியில் தனியொரு பெண் சிங்கமாய்
சட்டமன்றத்திற்கு சென்ற இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் நீ...

தன்னுடைய பகைவருக்கும் வரக்கூடாது என்று அந்நாளில் நினைக்க வைத்த
புற்றுநோய் என்னும் கொடிய அரக்கனிடமிருந்து மனித சமுதாயத்தை மீட்டிட
சென்னை அடையாரில் புற்றுநோய் மருத்துவமனை நிறுவி
நோய்வாய்பட்டவருக்கு மறுவாழ்வு அளித்து செவிலித்தாயானவள் நீ...

அக்காலத்தில் பெண்களுக்கு இழைத்த மிகப்பெரிய கொடுமையான
தேவதாசி என்னும் முறையற்ற பழக்கத்தை
இந்தியாவிலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் வேருடன் களையெடுக்க
தந்தை பெரியாருடன் சேர்ந்து போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர் நீ...

இவற்றிர்க்கெல்லாம் முத்தாய்ப்பாக...

குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காக
தமிழ்நாட்டு குழந்தைகளின் இரண்டாம் கருவறையான
சென்னை குழதைகள் நல மருத்துவமனை நிறுவி
மறுபிறவி எடுக்க வந்த தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் மறுபிறவி அளித்தவர் நீ...

இவ்வளவு செயற்கரிய செயல்கள் செய்த நீ...
இன்று மிக சிலருக்கு மட்டுமே தெரிந்த நீ...
எனக்கு இரண்டாம் கருவறை கொடுத்த நீ...
மருத்துவர்.முத்துலச்சுமி ரெட்டி என்கின்ற நீ...

புதன், 7 மார்ச், 2012



பழமொழி: ஆமை புகுந்த வீடு உருப்படாது


ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும் என்று இந்த பழமொழிக்குப் பொருள் கொண்டு. ஆமையின் மேல் ஒரு "துரதிருஷ்டசாலி" என்னும் பழியைப் போடுகின்றனர் நம் மக்கள்.


ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு இக்கருத்து சரியாகுமா? இல்லை. ஆமை என்ன தவறு செய்தது? அதன் மேல் நாம் ஏன் வீண்பழி போடவேண்டும்?. நீர்நிலைகளில் வசிக்கும் இயல்புடைய ஆமை நமது வீட்டிற்கு ஏன் வரவேண்டும்?. சரி தவறுதலாக எப்படியோ ஒரு ஆமை நமது வீட்டிற்குள் புகுந்து விட்டால் எப்படி அந்த வீடு உருப்படாமல் போகும்? எனவே இந்த தவறான கருத்தை இன்றோடு கைவிடுங்கள்.

அப்படி என்றால் இந்தப் பழமொழியின் உண்மையான பொருள் என்ன? வழக்கம் போல சொல்பிழைகளால் இந்தப் பழமொழியில் பொருள் மாறுபாடு அடைந்துள்ளது. தூய செந்தமிழ்ச் சொற்கள் கொச்சை வழக்கில் எப்படி எல்லாம் மாறுபாடு அடைகின்றன என்பதற்கு இந்தப் பழமொழியும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

உங்களுக்குக் காளானைப் பற்றித் தெரியும். புழுத்துப்போன மரம், மாட்டுச்சாணம், வைக்கோல் முதலான பொருட்களில் இருந்து சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தானாகத் தோன்றும் ஒரு வகைப் பூஞ்சை தான் இது. இருட்டும் ஈரப்பதமும் காளான் தோன்றுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள். எப்போதுமே இருளாகவும் ஈரமாகவும் மக்கிப்போன பழைய மரங்களுடன் இருக்கும் வீட்டில் காளான் இயல்பாகவே தோன்றும். இது போன்ற வீட்டில் குடி இருப்பவர்கள் உடல்நலத்துடன் இருக்க முடியுமா?. முடியவே முடியாது. ஏனென்றால் இந்தச் சூழ்நிலையில் வசிக்கும் மனிதர்களுக்கு காசநோய், மனநோய், சருமநோய் முதலான பல நோய்கள் தொற்றிக்கொள்ளும்.



கதிரவனின் ஒளியும் வெப்பமும் இல்லாத வீட்டிற்கு வெளியாட்களும் வர விரும்ப மாட்டார்கள். எனவே இது மாதிரி வீட்டில் வசிப்பவர்கள் கவனிப்பார் யாருமின்றி நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தேடிக்கொள்வர். ஆக மொத்தத்தில் காளான் பூத்த இந்த வீடு உருப்படாமலேயே போய்விடும். இதைத்தான் இந்த பழமொழியும் கூறுகிறது. சரியான பழமொழி இது தான்:

ஆம்பி பூத்த வீடு உருப்படாது.
(ஆம்பி = காளான்)

இதில் உள்ள தூய தமிழ்ச்சொற்களான "ஆம்பி பூத்த" என்பன கொச்சைச் சொற்களாக மாறி பின்னர் உருமாறி இறுதியில் மீண்டும் தூய தமிழ் வடிவம் பெற்று இவ்வாறு நிற்கிறது. இந்த வரலாறு கீழே காட்டப்பட்டு உள்ளது.

ஆம்பி பூத்த > ஆமி பூத்த > ஆமெ பூத்த > ஆமெ பூந்த > ஆமை புகுந்த

விடுகதை

மூன்றெழுத்தில் ஒரு சொல்லாம் அந்தச் சொல்லின்
முதலிலுள்ள இரண்டெழுத்தை இணைய வைத்தே
ஊன்றியே நோக்கினால் ‘அதிகம்’ ஆகும்....

உள்ள கடைழுத்தோ நம் உறுப்பின் பேராம்
நான் சொன்ன அச்சொல்லின் நடுவெழுத்தை
நீக்கினால் விரோதமாகும்...
நன்றே அந்த மூன்றெழுதுச் சொல் இன்னதென்று சொல்வீர்
முடியாமற் போகாது தேடிப் பார்த்தால்...

செவ்வாய், 6 மார்ச், 2012

தலைக்கவசம்...


படித்ததில் பிடித்தது:

குழியினுள் புதைந்தும், மேடாக உயர்ந்தும்
ஓடாகத் தேய்ந்தும், இலைமறைகாயாக
மாநகரச் சாலைகள்...

திரும்பிய திசையெல்லாம் கண்களைக் கவர்ந்து
கவனத்தைச் சிதறடிக்கும் கவர்ச்சி விளம்பரங்களும்
விளம்பர நடிகைகளும் வழிநெடுக...
வானுயர பேனர்களில்!

அலுவலக அவசரத்தில் பறந்து வருவதும்
குறுக்கே புகுந்து வருவதும், சிக்னலில் சிக்கி வருவதும்...
குழம்பிய குட்டையாய்...
சாலைப் பாதுகாப்பு...

சாலை விதிகள் நமக்குத் தெரியும், எதிரே வருபவருக்கு?
மோதினால்தான் தெரியும்...
தெரியாதென்பது...

அன்று... போருக்கு மட்டுமே தலைக்கவசம்
மற்ற நாளெல்லாம் பேருக்கு... அலங்காரமாய்...
இன்றோ... சாலைப்பயணமே போருக்குச் சமம்...
நேருக்கு நேர், கொரில்லா யுத்தம்...
விழுப்புண் அனைத்துமே உண்டு...
கப்பமும் கட்டலாம்...

இன்னுமென்ன தயக்கம்?
தலைக்கவசமணிவதே உன்னதம்...
இது சுமையல்ல...
மூளைக்கு மரியாதை...

சின்னஞ்சிறு கவிதைகள்...


படித்ததில் பிடித்தது:

வாஸ்து பார்க்கவும் நேரமில்லாமல்
கூட்டு முயற்சியில்... தேனீக்கள்...

விருந்துக்கு யாருமே வரவில்லை
கவலையில்... வலையில் சிலந்தி...

பரிணாம வளர்ச்சியா?
பரிதாப வளர்ச்சியா?
துப்பட்டாவாக தாவணி...

எண்களை குறிக்கும் சொற்கள்...


தமிழில் 1 முதல் 899 வரை உள்ள எண்களை குறிக்கும் அனைத்து சொற்களுமே "உ" கரத்தில் தான் முடியும்.

உதாரணம்:

ஒன்று - கடைசி எழுத்து "று" = ற் + உ.
இரண்டு - கடைசி எழுத்து "டு" = ட் + உ.
எண்ணூற்றி தொன்னுற்று ஒன்பது - கடைசி எழுத்து "து" = த் +உ.

வாஸ்து


படித்ததில் பிடித்தது:

பெயரை மாற்றினான்...
அதிர்ஷ்டக்கல் மோதிரம் மாட்டினான்...
வாஸ்துப்படி வாசலை மாற்றினான்...
வாஸ்து மரம் நட்டான்...
மூலையிலே மீன்தொட்டி வைத்தான்...
வாஸ்து மீன் வளர்த்தான்...
இத்தனைக்குப் பிறகும்
முன்னேற்றமின்றி
மீண்டும் சோதிடரைப் பார்த்தான்...
சோதிடர்: "நீங்க சுகப்பிரசவமா?
வாஸ்துப்படி வயிற்றுவழி பொறந்திருக்கணும்..."

படிப்புக்குப் பணம்...


படித்ததில் பிடித்தது:

படிப்புக்குப் பணம் கட்டும்போதெல்லாம்
கடைசி நாள்வரை காத்திருப்பது
நானாக மட்டுமேயிருப்பேன்...
தவறாமல் நடக்கிறது
எங்கம்மாவிற்காக
பள்ளியில் நான் அடிவாங்குவதும்
எனக்காக எங்கம்மா
முதலியாரிடம் திட்டு வாங்குவதும்...!
எங்கம்மாவால் திட்ட முடிவதில்லை,
தையற்கூலி தருவதற்கு
நாள் தவறியவர்களை...

கழைக்கூத்துச் சிறுமி....


படித்ததில் பிடித்தது:

அந்தரத்தில் நடந்தும்
தலைகுப்புறக் கவிழ்ந்தும்
பின்னோக்கி வில்லென வளைந்தும்
பலமுறை பல்டியடித்தும்
சிந்திட உள்ளுக்குள் ஒன்றுமில்லா
வெற்று வயிறென நிரூபித்தபின்
யாசகம் கேட்டு வருகிறாள்
கழைக்கூத்துச் சிறுமி...!

அளவுகோல்


படித்ததில் பிடித்தது:

என்னுடைய அளவுகோல்-ஐ வாங்கி
என்னையே அடித்து உடைத்த ஆசிரியரும் உண்டு...
ஆனால் உடைத்த அளவுகோல்-ஐ ஒருபோதும்
வாங்கித் தந்ததில்லை...!

பழமொழி: பாத்திரம் அறிந்து பிச்சை இடு


பழமொழி: பாத்திரம் அறிந்து பிச்சை இடு!

தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது.

'பிச்சைக்காரன் வைத்திருக்கும் பாத்திரத்தின் தன்மை அறிந்து அதற்கேற்ப அவனுக்குப் பிச்சை இடு.' - இதுவே அதன் பொருள் என்று தவறாகக் கூறப்பட்டு வருகிறது.

இந்த கருத்து சற்றேனும் ஏற்புடையதாக இருக்கிறதா?. பிச்சைக்காரன் கையில் வைத்திருக்கும் பாத்திரம் பெரியதா? சிறியதா? அலுமினியமா? வெள்ளியா? பித்தளையா? திருவோடா? என்றெல்லாம் பார்த்து பிச்சை இடுங்கள் என்று கருத்து சொன்னால் அது நகைப்புக்கு இடமளிப்பதாய் இருப்பதுடன் அதை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

இப்போது நாம் பயன்படுத்தும் 'பிச்சை' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் 'பரிசு' என்று பொருள். ஏன் தெரியுமா? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்குக் கிடைக்கும் பரிசு ஆகும். புலவனின் பாடும் திறம் அதாவது திறமையை அறிந்தே அக்காலத்தில் அவனுக்கு பிச்சை அதாவது பரிசுகளைக் கொடுத்தனர் மன்னர்களும் சிற்றரசர்களும். இதன் அடிப்படையில் தான் இந்தப் பழமொழியும் உண்டானது. காலப்போக்கில் ஒரே ஒரு எழுத்து மாற்றத்தால் அதாவது 'ற' கரத்திற்குப் பதிலாக 'ர' கரத்தைப் போட்டதால் பொருளே மாறிப்போய் ஒரு வரலாற்றுச் செய்தியே அதற்குள் முடக்கப்பட்டு விட்டது. உண்மையான பழமொழி இது தான்:

' பாத்திறம் அறிந்து பிச்சை இடு.'
(பாத்திறம் = பா+திறம் = பாடும் திறமை)

பழந்தமிழர்கள் பயன்படுத்திய கால அளவுகள்


பழந்தமிழர்கள் பயன்படுத்திய கால அளவுகள்:

60 தற்பரை - 1 வினாடி.
60 வினாடிகள் - 1 நிமிடம்
24 நிமிடம் - 1 நாழிகை
2 1/2 நாழிகை - 1 மணி
3 3/4 நாழிகை - 1 முகூர்த்தம்
7 1/2 நாழிகை (அ) 2 முகூர்த்தம் - 1 யாமம்
60 நாழிகை 1 நாள்.
8 யாமம் 1 நாள்.
7 நாள் 1 கிழமை.
15 நாள் 1 பக்கம்.
2 பக்கம் 1 மாதம்.
2 மாதம் 1 பருவம்.
3 பருவம் 1 செலவு.
2 செலவு 1 ஆண்டு.

( 365 நாள் 15 நாழிகை 31 வினாடி 25 தற்பரைகல் கொண்டது ஓர் ஆண்டு )

தமிழ் எழுத்துக்களின் பிறப்பிடம்...


இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட "நன்னூல்" எனும் நூலில் தமிழ் எழுத்துக்கள் உடலில் எந்த இடத்தில பிறக்கிறது? பிறந்த எழுத்தை ஒலிக்க எந்த உறுப்பு துணை புரிக்கிறது? துணை புரியும் உறுப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை பற்றி விரிவாக கூறப்பட்டிருக்கிறது...

தமிழ் எழுத்துக்கள் உடலில் மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகிய நான்கு இடங்களில் பிறக்கிறது. இதை ஒலிக்க உதடு, நாக்கு, பல்,அண்பல் (அதாவது மேற்பல் வரிசையின் அடிப்பகுதி ), அண்ணம் ( வாயின் மேல்பகுதி ) பயன்படுகின்றது. அங்காத்தல் ( வாய் திறத்தல் ), உறல் ( பொருந்துதல் ), வருடல் ( தடவுதல் ), ஒற்றுதல், குவிதல் என்று செயல்படுகின்றது என விவரிக்கிறது.

அ,ஆ எனும் முதல் இரு எழுத்தும் கழுத்துப் பகுதியில் காற்று வெளிப்பட்டு - வாய் ஒலிப்பு உறுப்பாகி, வாய் திறத்தல் எனும் செயல்பாட்டில் பிறக்கின்றது...

இ,ஈ,எ,ஏ,ஐ ஆகிய ஐந்து உயிர் எழுத்தும், கழுத்துப் பகுதி காற்று பிறப்பிடமாகி, வாய்,அண்பல், அடிநாக்கு ஒலிப்பு உறுப்பாக, திறத்தல்-உறல் ( பொருந்துதல் ) செயலால் எழுத்தாகி ஒலிக்கிறது !.

உ,ஊ,ஒ,ஓ,ஒள ஆகிய ஐந்து உயிர் எழுத்தும் கழுத்தில் காற்று பிறப்பிடமாகி, ஒலிக்க உதடுகள் பயன்பட, குவிதல் செயல் மூலமாக பிறக்கின்றன...

பழமொழி: ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்


பழமொழி: ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

நையாண்டி: ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை கொடைக்கானலில் வளரும்.

யதார்த்த பொருள்: தன்னை சாராத பிள்ளையை பேணி காத்து வளர்த்தால் தன் பிள்ளை தானாகவே வளரும்.

இதன் அர்த்தம் சரிதான்!.. ஆனால் புரிதல்???

இங்கு ஊரான் பிள்ளை என்பது அவரவர் மனைவி.
ஏனென்றால், மனைவி என்பவள் இன்னொருவரின் பிள்ளையல்லவா.. அவளை பேணி காத்து வளர்த்தால் அவளின் வயிற்றில் வளரும் பிள்ளை தானாகவே வளரும்...

பழமொழி: களவும் கற்று மற


பழமொழி: களவும் கற்று மற

தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் பற்றிக் காணும் முன்னர் இதன் பொருள் என்ன என்று காணலாம்.

' திருட்டுத் தொழிலைக் கூட கற்றுக்கொண்டு பின்னர் மறந்துவிடு.' - இதுவே இதன் பொருள் ஆகும்.

எப்படி இருக்கிறது பொருள்?. மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது அல்லவா?. எப்படி இது போன்ற பொருளில் பழமொழிகள் உலாவருகின்றன என்பதே தெரியவில்லை. இப்படித் தவறான பழமொழிகள் புழங்குவதால் தான் சமுதாயத்தில் ஒழுக்கம் குன்றி தவறுகள் அதிகரித்து விட்டன.

'ஏன் தவறு செய்கிறாய்?' என்று கேட்டால், 'களவும் கற்று மற' என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்களே அதனால் நானும் இந்தத் தவறை ஒருமுறை செய்துவிட்டு பின்னர் மறந்துவிடுகிறேன் என்று சாக்கு சொல்லுகிறார்கள்.

அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி செய்யக்கூடாத தவறுகள் பட்டியலில் 'திருட்டு, சூது' ஆகியவை அடங்கும். இந்த இரண்டு தவறுகளும் ஒரு மனிதனை எந்த நிலைக்குக் கொண்டுசெல்லும் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. ஏனென்றால் அது உலகறிந்த உண்மை. திருட்டு என்பது பிறருக்கு உரிமை உடைய பொருளை அவருக்குத் தெரியாமல் தான் எடுத்துக் கொள்வது ஆகும். சூது என்பது பிறருக்குச் சொந்தமான பொருளை தந்திரத்தால் ஏமாற்றித் தான் கொள்வதாகும்.

'சூது' என்னும் தலைப்பில் பத்து குறள்களில் மிக அருமையாக விளக்கியுள்ளார் திருவள்ளுவர். சூது விளையாடியவனின் நிலை பற்றி ஒரு குறளில் வள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்.

குறள் எண்: 935
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.

இங்கே 'கவறு' என்பது 'சூதாடும் கருவியையும்', 'கழகம்' என்பது 'சூதாடும் இடத்தையும்' குறிக்கும். ' சூதாடும் கருவியையும் சூதாடும் இடத்தையும் தம் கைகளையும் நம்பி மேல்சென்றவர்கள் ஒன்றும் இல்லாதவராய் ஆவர்.' என்பதே இக்குறளின் பொருள் ஆகும்.

சூதாடும் கருவியைக் குறிக்கும் இந்த 'கவறு' என்னும் சொல்லை 'கற்று' என்று பழமொழியில் பிழையாக எழுதியதால் தான் தவறான பொருள்கோளுக்கு வழிவகுத்து விட்டது. களவுத்தொழிலைக் கையால் தான் செய்யவேண்டும். அதேபோல சூது விளையாட்டையும் முழுக்க முழுக்க கைகளால் தான் ஆடவேண்டும். ' இந்த இரண்டையும் கையில் தொடாமல் இரு' என்பதே இப்பழமொழியில் பெரியவர்கள் கூற வரும் அறிவுரை ஆகும். இனி சரியான பழமொழி இது தான்:

' களவும் கவறு மற'
(கவறு மற = கவறும்+அற; அற - தவிர்)

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...


"திருவிளையாடல்" திரைப்படத்தில் சிவனுக்கும் நக்கீரருக்கும் இடையே நடக்கும் வாக்குவாதத்தில் சிவன் ''அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி'' என்று தொட‌ங்கும் வசனத்தையும் பிற‌கு நக்கீரர் ''சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கு ஏது குலம்'' என்று தொடங்கும் வசனத்தையும் பேசுவர். இந்த வசனங்களின் ஆரம்பம் முதல் முடிவு வரை என்ன அர்த்தம்...?

அந்த திரைப்படத்தில் வரும் வசனம்:

சிவன்:
அங்கம் புழுதிபட, அரிவாளில் நெய்பூசி
பங்கம் படவிரண்டு கால் பரப்பி – சங்கதனைக்
கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ எம்கவியை
ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?

நக்கீரன்:
சங்கறுப்பது எங்கள் குலம்,
சங்கரனார்க்கு ஏது குலம்? – சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனே உம் போல்
இரந்துண்டு வாழ்வதில்லை..!!!

பொருள்: நக்கீரனின் குல தொழில் சங்கை அறுத்து வளையல் செய்து விற்பது. அதை தான், சிவனார், உடலெல்லாம் புழுதிபட, சங்கு பொறுக்கி, அரிவாளில் நெய் தடவி(அறுக்கும் போது, சங்கின் துகள் சிதறாமல், பறக்காமல் அரிவாளுடன் ஒட்டிக்கொள்ளும்), சங்கினை இரண்டாக பங்கம் செய்ய உன் கால்கள் இரண்டையும் பரப்பி, கீர் கீறென்று சங்கை கீறும் நக்கீரனோ என் பாடலில் பிழை சொல்வது? என்றார்.

அதற்கு மறுமொழி, "சங்கு அறுப்பது எங்கள் குலம், ஆனால் சிவனாகிய உனக்கு என்ன குலம் இருக்கிறது. மேலும் சங்கினை அறுத்து உழைத்து சாப்பிடுவது எங்கள் பழக்கம் ஆனால், சிவனாரே!, அந்த சங்கினை பிச்சைப்பாத்திரமாக்கி இரந்துண்டு(பிச்சை பெற்று) உண்ணுதல் உன்னுடைய வழக்கம்" என்று கூறுகிறார்.

இந்த வசனம், தனி பாடல் திரட்டு என்று பாடல் தொகுதியில் இருந்து கையாளப்பட்டது.

அங்கம் வளர்க்க அரிவாளின் நெய்தடவிப்
பங்கப் படஇரண்டு கால்பரப்பிச் – சங்கதனைக்
கீருகீர் என்று அறுக்கும் கீரனோ என்கவியைப்
பாரில் பழுதுஎன் பவன்

சங்கறுப்பது எங்கள்குலம் சங்கரர்க்கு அங்கு ஏதுகுலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ – சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழ்வோம்...