செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

கணக்கதிகாரம் -  கலப்பின உலோகம் செய்யும் முறை

பண்டைகாலங்களில் அரசர்களின் பல்லக்கில் இருந்து போர்வாள் வரை அனைத்தும் உருவாக்க அல்லது வடிவமைக்க பட்டறைகள் தேவைப்பட்டிருக்கிறது. அதன் காரணமாகவே பட்டறைகள் உருவாயின. பின்னர், கொல்லன் பட்டறை , தச்சன் பட்டறை என்று பல துறைகள் உருவாயின.

உலோகங்களை கொண்டு பித்தளை, வெண்கலம் போன்ற கலப்புரு பொருட்களை தமிழர்களும் உருவாக்கிருக்கிறார்கள். தமிழ் கணித நூலான கணக்கதிகாரத்தில், வெண்கலம் மற்றும் பித்தளை பிறப்பிக்கும் விவரம் பற்றிய ஒரு செய்யுள் காணப்படுகிறது.

"எட்டெடை செம்பி லிரெண்டை யீயமிடில்
திட்டமாய் வெண்கலமாஞ் சேர்ந்துருக்கி - லிட்டமுடன்
ஓரேழு செம்பி லொருமூன் றுதுத்தமிடில்
பாரறியப் பித்தளையாம் யார்"

ஒரு எடை என்பது ஒரு பலம், அதாவது 40.8 கிராம்

ஈயம் , துத்தம் - உலோகங்கள் ; பலம் - பழந்தமிழர் எடை அளவு (40.8 கிராம்).

விளக்கம்:

வெண்கலம் பித்தளை பிறப்பிக்கும் விவரம் எட்டுப்பலஞ் செம்பிலே இரண்டு பலம் ஈயமிட்டுருக்க வெண்கலமாம். ஏழலரைப் பலஞ் செம்பிலே மூன்று பலந் துத்தமிட்டுருக்க பித்தளையாம் என்று .

இக்குறிப்பில் இருந்து, 326.4 கிராம் செம்பும், 81.6 கிராம் ஈயமும் ஒரு உலையில் போட்டு நன்கு கலவை செய்து உருக்கி வருவது வெண்கலம் என்றும், 306 கிராம் செம்பும், 122.4 கிராம் துத்தமும் உலையில் போட்டு உருக்கி வருவது பித்தளை என்றும் தெரிகிறது . ஆனால் கிடைக்கும் வெண்கலமும், பித்தளையும் எவ்வளவு எடை இருக்கும் என்ற குறிப்பு காணப்பட வில்லை. ஆகையால் இதன் எடைகளை கூட்டி , ஏறக்குறைய 400 கிராம் வெண்கலமும், 425 கிராம் பித்தளையும் கிடைக்கும் என்று கூறலாம்.

சனி, 25 ஆகஸ்ட், 2012


வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போல் மறைமுகமாக இகழ்வதும், இகழ்வது போல் மறைமுகமாகப் புகழ்வதுமாகும்.

எடுத்துக்காட்டுகள்:

புகழ்வது போல் இகழ்தல்:

தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்
திருக்குறள் - திருவள்ளுவர்

"கயவர்கள் தம்மனம் விரும்பும் செயல்களைத் தடுப்பாரின்றிச் செய்து முடிப்பதால் தாம் விரும்பும் செயல்களைச் செய்யும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்" என்பது இக்குறட்பாவின் பொருள்.

கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போல தோன்றினாலும், தேவர்கள் உயர்ந்த செயல்களையே செய்வர், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருள் குறிப்பால் உணர்த்துவதைக் கானலாம். எனவே இது உண்மையில் கயவர்களை பழித்தலே ஆகும். (புகழ்வது போல் இகழ்தல்)

இகழ்வது போல் புகழ்தல்:

பாரி பாரி என்றுபல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே
புறநானூறு பாடியவர்: கபிலர்

"புலவர் பலரும் பாரி ஒருவனையே புகழ்கின்றனர். பாரி ஒருவன் மட்டுமா கைம்மாறு கருதாமல் கொடுக்கின்றான்? மாரியும்தான் கைம்மாறு கருதாமல் கொடுத்து இவ்வுலகம் புரக்கின்றது" என்பது இப்பாடலின் பொருள். இது பாரியை இகழ்வது போலத் தோன்றினும், பாரிக்கு நிகராகக் கொடுப்பாரில்லை என்று புகழ்ந்ததே ஆகும்.(இகழ்வது போல் புகழ்தல்)

விகடராமன் குதிரை

முன்னே கடிவாளம், மூன்று பேர் தொட்டு இழுக்கப்
பின்னே இருந்து இரண்டு பேர் தள்ள – எந்நேரம்
வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை
மாதம் போம் காத வழி!
நூல்: தனிப்பாடல், பாடியவர்: காளமேகம்

விகடராமன் என்பவர் ஒரு மெலிந்த குதிரையையும் சில வேலைக்காரர்களையும் வைத்துக்கொண்டு ஊர் முழுக்க அலட்டல் உலா வந்துகொண்டிருந்தார். அதைப் பார்த்த காளமேகம் கிண்டலாகப் பாடிய பாடல் இது. எந்நேரமும் வேதம் படிக்கிறவன் விகடராமன். அவனுடைய குதிரைக்கு முன்னே கடிவாளம் உண்டு, ஆனால் அதைத் தொட்டு இழுத்து ஓட்டுவதற்கு ஒருவர் போதாது, மூன்று பேர் வேண்டும்.அப்போதும் அந்தக் குதிரை ஓடிவிடாது. பின்னால் நின்றபடி இரண்டு பேர் தள்ளவேண்டும். இப்படி ஐந்து பேரால் ‘ஓட்டப்படும்’ அந்தக் குதிரை, அதிவேகமாக ஓடும், மாதம் ஒன்றுக்குக் காத தூரம் சென்றுவிடும்.

’காதம்’ என்பது பழங்காலத் தமிழ் அளவுமுறை. ஒரு காதம் = சுமார் ஆறே முக்கால் கிலோமீட்டர்.