வியாழன், 8 நவம்பர், 2012


புறநானூறு பாடல் 3 – இல்லாமை தீர்ப்பவன்
பாடியவர் – இரும்பிடர்த் தலையார்
பாடப்பெற்றவர் – பாண்டியன் கருங் கை ஒள் வாட்பெரும்பெயர் வழுதி
திணை: பாடாண் திணை
துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்

பாடல்:
உவவு மதி உருவின் ஓங்கல் வெண் குடை
நிலவுக் கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற,
ஏம முரசம் இழுமென முழங்க,
நேமி உய்த்த நேஎ நெஞ்சின்,
தவிரா ஈகை, கவுரியர் மருக !

செயிர் தீர கற்பின் சேயிழை கணவ !
பொன் ஓடைப் புகர் அணி நுதல்,
துன் அருந் திறல் கமழ் கடாஅத்து.
எயிறு படையாக எயிற் கதவு இடாஅ,
கயிறு பிணிக்கொண்ட கவிழ் மணி மருங்கின்,

பெருங் கை, யானை இரும் பிடர்த் தலை இருந்து,
மருந்து இல் கூற்றத்து அருந் தொழில் சாயாக்
கருங் கை ஓள் வாட் பெரும்பெயர் வழுதி !
நிலம் பெயரினும், நின் சொல் பெயரால்;
பொலங் கழற் கால புலர் சாந்தின்

விலங்கு அகன்ற வியல மார்ப !
ஊர் இல்ல, உயவு அரிய,
நீர் இல்ல, நீள் இடைய,
பார்வல் இருக்கை, கவி கண் நோக்கின்,
செந் தொடை பிழையா வன்கண் ஆடவர்

அம்பு விட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை,
திருந்து சிறை வளை வாய்ப் பருந்து இருந்து உயவும்
உன்ன மரத்த துன் அருங் கவலை,
நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் – அது
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர்
இன்மை தீர்த்தல் வன்மையானே.

எளிய உரை:
உன் உயர்ந்த வெண்குடை போல நிலவு
கடல் வரம்பு பரந்த நாட்டில்
காவல் முரசு முழங்க
ஆட்சி செய்யும், கொடுப்பது தவறாத
பாண்டியன் மரபினில்
கற்புள்ள மனைவியின் கணவர்
பொன் முகப்படத்தை நெற்றியில் அணிந்த
யானையின் பிடரிமேல் உட்கார்ந்து
மின்னும் வாளுடன் போர் செய்யும் வழுதி !
இடையில் ஊர் ஏதும் இல்லாது
கானல் வீச, நீரில்லாமல்
நீண்ட இடைப்பாதை,
வழிப்பரிக்காரர்களை
கண்மேல் கை குவித்துப் பார்த்திருக்கும் மறவர்கள்,
அவர்களின் குறி தவறாத அம்புகள்,
அம்பு பட்டவர்களை மூடியிருக்கும்
கற்க்குவியல்கள்,
அவ்வுடல்களை உண்ண மரத்திலிருந்து
பார்த்திருக்கும் பருந்து,
உன்னைக் காணும் ஆர்வத்துடன்
இரவலர்கள் வருவார்கள். அவர்கள் இச்சையை
முகத்தைப் பார்த்தே உணர்ந்து
அவர்கள் வறுமையை தீர்க்கும்
வலிமை பெற்றவனே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக