புதன், 24 அக்டோபர், 2012


புறநானூறு பாடல் 2 – பாரதத்தில் சோறளித்த சிறப்பு

பாடியவர் – முரஞ்சியூர் முடி நாகராயர்
பாடப்பெற்றவர் – சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன்
திணை: பாடாண் திணை
துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்

பாடல்:
மண் திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்,
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு

ஐம பெரும் பூதத்து இயற்கை போல –
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,
வலியும், தெறலும், அளியும், உடையோய் !
நின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண் தலைப் புணரிக் குட கடற் குளிக்கும்,

யாணர் வைப்பின், நல் நாட்டுப் பொருந !
வான வரம்பனை ! நீயோ, பெரும !
அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ,
நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை
ஈர் – ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய,

பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய் !
பா அல் புளிப்பினும், பகல் இருளினும்,
நா அல் வேத நெறி திரியினும்,
திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி,
நடுக்கின்றி நிலியரோ அத்தை – அடுக்கத்து,

சிறு தலை நவ்விப் பெருங் கண் மாப் பிணை,
அந்தி அந்தணர் அருங் கடன் இறுக்கும்
முத் தீ விளக்கின், துஞ்சும்
பொற் கோட்டு இமயமும், பொதியமும், போன்றே !

எளிய உரை:
மண் நிறைந்த நிலமும்
நிலம் ஏந்திய வானமும்
வானைத் தழுவும் காற்றும்
காற்று வளர்க்கும் நெருப்பும்
நெருப்பைப் பகைக்கும் நீரும் என்றபடி
ஐம்புலன்களின் இயற்கை போல
பகைவரிடம் பொறுமை, விரிவான ஆலோசனை,
வலிமை, திறமை, தருமமும் உள்ளவனே,
உன் கடலில் பிறந்த சூரியன்
வெண்தலை அலைகள் கொண்ட
மேற்குக் கடலில் குளிக்கும்
நல்ல நாட்டின் அரசனே,
வானம் உன் வரம்பு.
பாண்டவர்கள்
நிலத்தை பற்றிக்கொண்ட
நூறு பேருடன் போராடிய
பாரதப் போரில் சோறுபோட்டாய்.
பால் புளிக்கலாம்,
பகல் இருளாகலாம்,
நாலு வேதங்கள் திசை மாறலாம்,
உன்னைச் சேர்ந்தவர் மாற மாட்டார்கள்.
அந்தணர் அந்திவேளைக் கடமைகளில் எழுப்பும்
தீயின் வெளிச்சத்தில்,
சிறிய தலை, பெரிய கண் பெண்மான் உறங்கும்,
மலைச் சரிவுள்ள
பொன் உச்சி இமயமும் பொதிகை மலையும் போல
நீண்டநாள் வாழ்வாய்.

1 கருத்து: