செவ்வாய், 23 அக்டோபர், 2012


புறநானூறு பாடல் 1 – உமையை இடப்பக்கம் கொண்ட ஒருவன்

பாடியவர் – பெருந்தேவனார்
பாடப்பெற்றவர் – சிவபெருமான்

பாடல்:
கண்ணி கார் நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாரும் கொன்றை :
ஊர்தி வால் வெள் ஏறே; சிறந்த
சீர் கெழு கொடியும் அவ் ஏறு என்ப :
கரை மிடறு அணியலும் அணிந்தன்று; அக் கறை
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ் உருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்:
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப் பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே –
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீர் அறவு அறியாக் கரகத்து,
தாழ்சடைப் பொலிந்த, அருந் தவத்தோற்கே.

எளிய உரை:
தலையிலும் அழகிய மார்பிலும் கொன்றைப் பூ மாலை,
வாகனம் எருது, கொடியும் எருது,
கழுத்தை அழகு செய்யும் நச்சுக் கறை,
அதை அந்தணர்கள் புகழ்வார்,
சில சமயம் பாதிப் பெண்ணாகவும் தோன்றி மறையும் உருவம்,
நெற்றியில் நிலாத் துண்டம்,
அதைப் போற்ற பதினெட்டு கந்தர்வர்கள்,
எல்லா உயிர்களுக்கும் காவல்,
நீர் வற்றாத கமண்டலம்,
கடுந்தவத்தின் அடையாளமாக தாழ்ந்த சடை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக