ஞாயிறு, 21 அக்டோபர், 2012


புறநானூறு... தொடர்ச்சி...

புறநானூறின் காலத்தைப் பற்றி நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் உள்ளன. புறநானூறு உள்ளிட்ட பல சங்கப்பாடல்களில் யவனர்களைப் பற்றியும் அவர்களுடன் வாணிபம் பற்றியும் வரிகள் உள்ளன. பெரிப்லூசு, டாலமி, ப்ளினி போன்றவர்களின் பூகோளப் பிரயாண நூல்களில் தென்னிந்தியத் துறைமுகங்களில் குறிப்பாக மிளகு பண்டமாற்று நடந்ததைப்பற்றியும் செய்திகள் உள்ளன. புறநானூறு பாடல் 343இல் முசிறி துறைமுகத்தில் வீடுதோறும் மிளகு குவித்து வைத்திருப்பதையும் அவைகளை பண்டமாற்ற தங்கத்தைக் கொண்டுவரும் சிறு படகுகளையும் பற்றி சொல்கிறது.

பாடல் 174 சோழ அரசனை மீட்ட ஒரு சரித்திர சம்பவத்தை கூறுகிறது. சிலப்பதிகாரம், சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவில் கட்டியதையும் இலங்கை மன்னன் கயவாகு வந்து வழிபட்டதையும் சொல்கிறது.கயவாகு கி.பி. 171இலிருந்து 192வரை ஆண்டதை கெய்கர் குறிப்பிட்டுள்ளார். செங்குட்டுவன் காலத்தை பதிற்றுப்பத்திலிருந்து கி.பி. 170இலிருந்து 226வரை என அறியமுடிகிறது. செங்குட்டுவன், உதியன் செரலாதனின் பேரன். எந்த நூற்றாண்டாக இருந்தாலும் புறநானூற்றின் பாடல்கள் உலக இலக்கியத் தரத்துக்கு உயர்ந்தவை என்பதில் சந்தேகமில்லை.

புறநானூற்றின் பாடல்களில் உவமைகள் அதிகம். “என்ன கேட்கிறாய்” என்று நேரடியாக சொல்லாமல் “என் சிறிய வீட்டின் நல்ல தூணைப் பிடித்துக்கொண்டு என்ன கேட்கிறாய்” என்று சொல்வார்கள். வேல் என்று நேரடியாக சொல்லமாட்டார்கள், “பூவார் காவின் புனிற்றுப் புலால் நெடுவேல்” என்பார்கள். பூமியில் சிறிந்த பாதுகாப்பும் புதிதான புலால் நாற்றமும் உடைய நீண்ட வேல் என்பார்கள். மனைவி என்று நேரடியாக இருக்காது. “நாண் அலது இல்லாக் கற்பின் வாள்நூதல் மெல்லியல் குறுமகள்” என்று சொல்லுவார்கள். நாணம் மட்டுமே நகையாக அணிந்த மனைவியை நோக்கித் திரும்புகிறேன் என்பதை அவள் நெற்றி கண் போன்றவைகளை ஆகுபெயர்களாகச் சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமில்லாமல் வருநித்துவிட்டுத்தான் விடயத்துக்கே வருவார்கள். அதில் அவளது ஏழ்மையும் அழகும் ஒரே சமயத்தில் வெளிப்படுகின்றன.

அடுத்த பதிவிலிருந்து புறநானூறு பாடல்கள் தொடங்கும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக