ஞாயிறு, 21 அக்டோபர், 2012


புறநானூறு:

புறநானூறு சங்க காலத்தை சேர்ந்த ஒரு தொகை நூல். தொகை என்றால் தொகுப்பு. இப்போது கவிதை தொகுப்புகள் வருவதில்லையா, அது போல் பழன்காலத்துத் தொகுப்புகள் பல உள்ளன. அவைகளில் எட்டு சங்க காலத்தை சார்ந்தவை. எட்டுத்தொகை என்பார்கள். அவற்றின் பெயர்கள் ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல். இவைகளுடன் பத்து நீண்ட பாடல்களும் சங்க காலத்தைச் சேரும். அவை பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பட்டினப் பாலை, குறிஞ்சிப் பாட்டு, மலைபடுகடாம், மதுரைக்காஞ்சி, நெடுநெல்வாடை, முல்லைப் பாட்டு, சிறுபாணாற்றுப்படை, திருமுருகாற்றுப்படை. இவை இரண்டிலும் சேர்ந்து மொத்தம் 2381 தனிப்பாடல்கள் உள்ளன. மூன்று வரியிலிருந்து 782 வரை நீளமுள்ள பாடல்கள். உலக இலக்கியத்தில் எதிலும் இம்மாதிரியான தொகுப்புகள் இல்லை.

இன்றைய தொகுப்புகள் பெரும்பாலும் ஒரே கவிஞருடையதாக இருக்கும். புறநானூறு அப்படியில்லை. பல புலவர்களின் நானூறு பாடல்களின் தொகுப்பு. புறம் என்னும் காதல் அல்லாத, வெளி உலகம் சார்ந்த வீரம், போர், கொடை, நற்குணங்கள், பரிசு கேட்டல், பெறுதல் போன்ற பொருள்களில் தொகுக்கப்பட்ட நானூறு பாடல்கள். சங்க இலக்கியங்களை அகம, புறம் என்று இரு பெரிய பிரிவின்கீழ் வகைப்படுத்துகிறார்கள்.

இந்த நானூறு பாடல்களைப் பற்றிய புள்ளி விவரங்கள். இந்த நானூறு பாடல்களில் இரண்டு பாடல்கள் கிடைக்கவில்லை. நாற்பத்து நாலு பாடல்களில் ஒரு சில சீர்கள் அல்லது வரிகள் இல்லாமல் குறைபட்டுக் கிடைத்துள்ளன. இந்த நானூறு பாடல்களை நூற்று நாற்பத்தேழு புலவர்க்குக் குறையாதவர்கள் பாடியுள்ளனர். சரியாக இத்தனை பேர் என்று சொல்ல முடியவில்லை. 159 வரை கணக்கு சொல்கிறார்கள். மூலத்தில் உள்ள பாட பேதங்களால் சில புலவர்களின் பெயர்கள் வேறுபடுகின்றன. உதாரணம் மாங்குடி கிழாரும் மாங்குடி மருதனாரும் ஒன்றா வேறா போன்ற சந்தேகங்கள் உள்ளன. சிருவெனண்தேரையர் என்பவரும் ஐயாதிச் சிறுவெண் தேரையார் என்பவரும் ஒருவரா என்பது தெரியவில்லை. பதினான்கு பாடல்களை எழுதியவர் பெயர் தெரியவில்லை.

இப்புலவர்களில் பதினான்கு பேர் அரசர்கள், அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் ஆதரவில் இப்பாடல்கள் தொகுக்கப்பட்டிருக்கலாம் (நற்றிணை நூல் அப்படித்தான் மாறன்வழுதி மன்னனால் தொகுக்கப்பட்டது). புறநானூற்றுப் புலவர்களில், பதினைந்து பேர் பெண்கள். புறநானூற்றுப் புலவர்களில் பலர் மற்ற சங்க நூல்களிலும் பாடியுள்ளனர். புறநானூறில் மட்டும் பாடிய புலவர்கள் அறுபத்தாறு பேர்.

தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக