வெள்ளி, 9 மார்ச், 2012


தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி...

என்ற கவி காளமேகப் புலவரின் பாடலைப் பார்த்தால் சற்றுத் திகைக்க வேண்டி வரும். இதோ அதன் பொருள்:

தாதி - தோழியின் (அடிமைப் பெண்ணின்)
தூதோ- மூலமாக அனுப்பும் தூது
தீது - நன்மை பயக்காது!
தத்தை - (நான் வளர்க்கும்) கிளியோ
தூது - தூதுப் பணியில் தூதை
ஓதாது - (திறம்பட) ஓதாது
தூதி தூது - தோழியின் தூதோ
ஒத்தித்த தூததே - நாளைக் கடத்திக் கொண்டே போகும்.
தாதொத்த - (ஆகவே) பூந்தாதினைப் போன்ற
துத்தி - தேமல்கள்
தத்தாதே- என் மேல் படராது
தேதுதித்த - தெய்வத்தை வழிபட்டுத்
தொத்து - தொடர்தலும்
தீது - தீதாகும்
தித்தித்தது _ தித்திப்பு நல்கும் என் காதலனின் பெயரை
ஓதித் திதி - ஓதிக் கொண்டிருப்பதையே செய்வேனாக...

கவிஞர் கண்ணதாசன் 'வானம்பாடி' திரைப்படத்தில், இதே பாடலை:

நடுவர் - உன்னுடைய கேள்விக்கெல்லாம் அவங்க பதில் சொல்லிட்டாங்க இனிமேல் அவங்க கேள்வி கேக்கலாமில்லே?

ஆண் - கேக்க சொல்லுங்க....

பெண்:
தாதி தூது தீது தத்தும் தத்தை சொல்லாது..
தூதி தூது ஒத்தித்தது தூது செல்லாது..
தேது தித்தித் தொத்து தீது தெய்வம் வராது - இங்கு
துத்தி தத்தும் தத்தை வாழ தித்தித்ததோது..

ஆண் - கேள்வியா இது ? என்ன உளர்றாங்க ?

நடுவர் - அவங்க ஒண்ணும் உளறலே.. நீதான் திணர்றே

ஆண் - நான் திணர்றேனாவது..

நடுவர் - பின்ன என்ன? வேணும்னா நீ தோல்விய ஒப்புக்க.. அவங்களே அர்த்தம் சொல்றாங்க

ஆண் - முதல்ல அர்த்தத்தை சொல்ல சொல்லுங்க.. அப்புறம் பேசலாம்

நடுவர் - சரி சொல்லுங்க..

பெண்:
அடிமைத் தூது பயன்படாது கிளிகள் பேசாது
அன்புத் தோழி தூது சென்றால் விரைவில் செல்லாது
தெய்வத்தையே தொழுது நின்றால் பயனிருக்காது - இளம்
தேமல் கொண்ட கன்னி வாழ இனியது கூறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக